பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிப்பு- தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு
சென்னை: பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் தடுக்கும் வகையில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களிலும், மாவட்ட தலைநகரங்களிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆண்டுதோறும் டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தை கறுப்பு தினமாக இஸ்லாமிய அமைப்புகள் கடைபிடித்து வருகின்றனர். இந்த நாளில், போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் நடத்துவது வழக்கம். இதனை முன்னிட்டு அசம்பாவிதங்கள் நிகழாதவகையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். பிரபல கோவில்கள், மக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையங்களில் பலத்த சோதனையும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கும்.

கோவையில் பாதுகாப்பு
பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று கோவை மாநகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை மாநகரில் உள்ள 11 சோதனைச் சாவடிகளிலும் சனிக்கிழமை பிற்பகல் முதல் அவ்வழியே செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உள்படுத்தப்படுகின்றன. காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் போலீஸார் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரயில் நிலையங்களில் சோதனை
கோவை, வடகோவை, பீளமேடு, சிங்காநல்லூர், போத்தனூர், இருகூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் உடைமைகள் முழுமையாக சோதனைக்கு உள்படுத்தப்படுகின்றன. அதேபோல், கோயில்கள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட 19 முக்கிய இடங்களில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்று அடுக்கு பாதுகாப்பு
கோவை விமான நிலையத்தில் பயணிகள், அவர்களது உடைமைகள் வாகனங்கள் பலத்த சோதனைக்குப் பின்னர் அனுமதிக்கப்படுகின்றன. விமான நிலையத்தைச் சுற்றிலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகரம் முழுவதும் காவல் உதவி ஆணையர்கள் தலைமையில் சுமார் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நெல்லை - தூத்துக்குடி
நெல்லை, தூத்துக்குடியி்ல் ரயில்நிலையங்கள் கோவில்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நெல்லை ரயில் நிலையம, எண்ணெய் நிறுவனங்கள், மின் நிலையம், பஸ் நிலையம், கோயில்கள், மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வாகன சோதனை
ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்படுகிறது. மாநகர எல்லை பகுதி சோதனை சாவடியில் இரவு முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. மாநகர போலீஸ் கமிஷனர் அன்பு தலைமையில் துணை கமிஷனர், உதவி கமிஷனர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் வாகனங்களில் சுற்றி வந்து கண்காணிக்கின்றனர்.
தூத்துக்குடியில் சோதனை
இது போல் தூத்துக்குடி மாவட்டத்தில் 14 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கும் இரவு முழுவதும் வாகன சோதனை நடநது வருகிறது. ரோந்து பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. எஸ்பி அஸ்வின் கோ்ட்ஷின் தலைமையில் 700 போலீசார் பாதகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications