டெங்கு... கோவையில் குழந்தை மரணம்: தமிழகத்தில் 200 பேருக்குப் பாதிப்பு
கோயம்புத்தூர்: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10 மாத ஆண் குழந்தை கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் சிக்குன்குனியா, மலேரியான நோய்கள் தாக்கி வரும் நிலையில் தமிழகத்தில் டெங்கு பீதி அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக டெங்கு உட்பட காய்ச்சல்கள் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் தீவிரமடைந்துள்ள காய்ச்சலால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள், சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவை மாவட்டம் துடியலூர் அருகே நேரு நகரைச் சேர்ந்த பச்சிளம் குழந்தை கடந்த 5 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை மரணமடைந்துள்ளது.

குழந்தை மரணம்
டெங்குவால் பாதிக்கப்பட்ட குழந்தை கடந்த 6 நாட்களுக்கு முன்னதாக மிகவும் மோசமான நிலையில் கொண்டு வரப்பட்ட குழந்தையை வெண்டிலேட்டரில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பொதுவாக 6 நாட்களுக்குள் டெங்கு வைரஸ் உடலில் இருந்து நீக்கப்பட வேண்டும். குழந்தைக்கு அது முடியாத காரணத்தால் செப்டிக் சாக் ஏற்பட்டு சுவாசக் கோளாறு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவமனையின் டீன் எட்வின் ஜோ கூறியுள்ளார்.

நோய் எதிர்ப்பு சக்தி
பாக்டீரியா பாதித்திருந்ததால் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்துபோனதால் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது வேறு எந்த டெங்கு பாதித்த நோயாளிகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் இல்லை. சாதாரண வைரஸ் காய்ச்சலால் தான் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மர்மக்காய்ச்சல் என்று கூறிக்கொண்டே திருவள்ளூர் மாவட்டத்தில் காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் நிலவேம்பு குடிநீர் வழங்கி வருகின்றனர்.

மத்திய சுகாதாரத்துறை
தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 8 மாதங்களில் கேரளாவில் 5,192 பேரும், ஒடிசாவில் 5,183 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

தமிழகத்தில் 200 பேர் பாதிப்பு
மேற்கு வங்கத்தில் 5,129 பேரும், கர்நாடகாவில் 3,788 பேரும் டெங்கு காய்ச்சலால், தமிழகத்தில் 1,163 பேர் என நாடுமுழுவதும் 27,879 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் 200 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச தடுப்பு மருந்துகள்
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு, காய்ச்சலை குறைக்க, நிலவேம்பு குடிநீர் கஷாயமும், ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, பப்பாளி இலை சாறும் அருமருந்தாக உள்ளது. நோய் எதிர்ப்பு சக்திக்கு, மலைவேம்பு சாறும் நல்ல மருந்தாகும். இப்போது இந்த மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இவற்றை பருகுவதன் மூலம் டெங்குவின் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.












Click it and Unblock the Notifications