தூத்துக்குடியில் சிக்கிய யு.எஸ் கப்பல் ஊழியர்கள் 35 பேரின் ஜாமீன் மனு டிஸ்மிஸ்
மதுரை: தூத்துக்குடியில் பிடிபட்ட அமெரிக்க கப்பல் ஊழியர்கள் 35 பேரின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
தூத்துக்குடி கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் உலா வந்த அமெரிக்காவின் தனியார் கடல் பாதுகாப்பு நிறுவனத்துக்கு சொந்தமான சீமேன் கார்டு ஓகியோ என்ற கப்பலை கடந்த அக்டோபர் மாதம் 12-ம் தேதி சிறைபிடிக்கப்பட்டது.
இக்கப்பலில் இருந்த 10 மாலுமிகள், 25 பயிற்சி பெற்ற பாதுகாவலர்களை கியூ பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், கப்பலில் இருந்த 35 அதிநவீன துப்பாக்கிகள், 5,680 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்த கப்பலுக்கு சட்டவிரோதமாக டீசல் வழங்கிய தூத்துக்குடியை சேர்ந்த 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதில், இங்கிலாந்து நாட்டவர் ஒருவர், இந்தியர்கள் 2 பேர் ஆகிய மூவரை கியூ பிரிவு போலீஸார் தங்கள் காவலில் எடுத்து 5 நாள்கள் விசாரித்தனர்.
இந்நிலையில் கப்பலில் கைது செய்யப்பட்ட 10 மாலுமிகள், 25 பாதுகாவலர்கள் சார்பில் ஜாமீன் வழங்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட அனைவரும் பாளையங்கோட்டை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜாமீன் கேட்டு 35 பேரும் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அவர்களின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.