மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது... 61 நாட்களுக்கு மீன்கள் 'பிஸி'!
சென்னை: மீன் பிடிப்பதற்கான தடைக்காலம் 45 நாட்களில் இருந்து 61 நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, மத்திய மீன்வளத்துறை அறிவித்துள்ளது. இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உடனடியாக இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வங்காள விரிகுடா கடல் பகுதியில் மீன்வளத்தை பெருக்கும் நோக்கோடு, இன்று நள்ளிரவு முதல் மே மாதம் 31ம் தேதி வரை மீன்பிடித் தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் விதிக்கப்படும் இந்த தடைகாலத்தின் மூலம் மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை செய்யப்படுகிறது. இந்நிலையில் மீன்பிடித் தடைகாலத்தை 61 நாட்களாக நீட்டித்து மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி நேற்று நள்ளிரவில் இருந்து ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை மீன்பிடித்தடை காலம் நீடிக்கப்பட்டுள்ளது. மீன் பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளதால் மீன்களின் விலை உயரும் அபாயம் எழுந்துள்ளது.

மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு
தஞ்சை மாவட்டத்தில் கடல் பகுதியில் இன்று முதல் விசைப்படகு, இழுவை படகுகளில் யாரும் மீன் பிடிக்க செல்லக்கூடாது என கலெக்டர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.
இதே போல் கடல் பகுதியில் தடையை மீறி மீன் பிடிக்க செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி, திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன் ஆகியோர் தெரிவித்தனர்.

கரை திரும்பிய மீனவர்கள்
தடை காலத்தை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் கடலுக்கு சென்ற படகுகள் நேற்று காலை முதலே கரைக்கு திரும்பியது. கோடியக்கரை, வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், வானமாதேவி, செருதூர், வேளாங்கண்ணி, நாகை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், சில்லடி, நாகூர், சந்திரபாடி, தரங்கம்பாடி, பூம்புகார், வானகிரி, திருமுல்லை வாசல், பழையார் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் ரெஸ்ட்
திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டையிலும், தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் ஆகிய பகுதி மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

சிறு படகுகளில்
சிறு படகுகள் மூலம் கரையோரத்தில் மட்டுமே மீன் பிடித்தல் நடைபெறுகிறது. இதனால் மீன் விலை உயரும் என மீனவர்கள் தெரிவித்தனர். மீன் பிடி தடை காலத்தை பயன்படுத்தி பழுதடைந்துள்ள விசைப்படகுகளை சீரமைக்க உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

தடை காலம் நீட்டிக்க எதிர்ப்பு
தடைக்கால நீட்டிப்புக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மீனவர்களிடம் எந்த கருத்தையும் கேட்காமல், மத்திய மீன்வளத்துறை தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மீன்வளத்துறையின் முடிவு குறித்து மீன கிராமங்களில் கூட்டம் நடத்தி மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கப்போவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாழ்வாதாரம் பாதிப்பு
மீன்பிடித் தடைக்காலம் 61 நாட்களாக நீட்டிக்கப்படுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், எனவே மீன்வளத்துறை உடனடியாக மறுபரிசீலனை செய்து மீன்பிடித்தடைக்காலத்தை வழக்கம் போல 45 நாட்களாக குறைக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தடை காலத்தில் அரசு வழங்கும் உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications