சென்னை மெரீனாவில் போராட்டம் நடத்த திடீர் தடை... லைட்ஹவுஸ் முதல் நேப்பியர் பாலம் வரை!
சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த சென்னை காவல்துறை தடைவிதித்துள்ளது.
சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் பொழுது போக்கிற்காக அதிக மக்கள் கூடுவதால், கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை உள்ள பகுதிகளில் போராட்டம் நடத்த காவல் துறை தடைவிதித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மாணவர்கள் எந்த போராட்டம் நடத்தினாலும் மெரீனாவில் நடத்திக் கொள்ளலாம் என்ற தவறான தகவல்கள் பரவி வருகிறது.
பெரும்பாலும் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் இந்த தகவல்கள் வாட்ஸ்அப், பேஸ்புக் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. இது போன்ற தகவல்களை மாணவர்கள் நம்ப வேண்டாம். மெரீனா கடற்கரைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து செல்கின்றனர்.
குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் மெரீனாபீச் சிறந்த பொழுது போக்கு மையமாக திகழ்ந்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக மெரீனாவில் போராட்டம், ஆர்ப்பாட்டம், அணிவகுப்பு போன்றவற்றுக்கு தடை செய்யப்பட்டிருந்தது. கலங்கரை விளக்கத்தில் இருந்து நேப்பியர் பாலம் வரை ஆர்ப்பாட்டங்களை நடத்தக்கூடாது என கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க இது சென்னை போலீசாரால் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் அந்த இடங்களில் கட்சி சார்ந்த அமைப்புக்கள் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு நடத்தி வருகின்றனர். மெரீனா பீச் உட்பட இனி கோர்ட்டால் தடை செய்யப்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியளிக்கப்படமாட்டாது.
சென்னை நகரில் வதந்தி பரப்புவோரையும், கலவரத்தை தூண்டுபவர்களையும் அடையாளம் கண்டு அவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மாணவர்களும், இளைஞர்களும் சென்னை போலீசுக்கு உரிய ஒத்துழைப்பு அளித்து சென்னை நகரில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்க உதவும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.