வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி... விவசாயிகள் தவிப்பு
நெல்லை: நெல்லை மாவட்ட பகுதிகளில் வாழைத்தார் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் பிரதான தொழில் விவசாயம். இந்த பகுதியை சேர்ந்த குறிப்பாக கிராமபபுறத்தை சேர்ந்த பொதுமக்கள் விவசாயத்தையே நம்பி இருக்கின்றனர். இதன் சுற்றுபுற பகுதியில் விளையும் வாழைத்தார்களுக்கு மவுசு அதிகம். இதன் பெரும்பாலான விவசாயிகள் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக வாழைகளை அதிக அளவில் சாகுபடி செய்கி்ன்றனர்.

இங்கு விளையும் ஏத்தன் ரக வாழைத்தார்கள் சிப்ஸ் தயாரிப்பதற்காக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து வரும் வியாபாரிகளும் இந்த ஏத்தன் ரக வாழைத்தார்களை அதிக அளவில் கொள்முதல் செய்து கேரளாவுக்கு கொண்டு விற்பனை செய்து வருகின்றனர். இந்தாண்டு நெல் சாகுபடிக்கு முன்பாக அதிக அளவில் வாழைத்தார் பயிரிடப்பட்டது. கடந்த மாதம் அதன் அறுவடை தொடங்கியது. ஆரம்ப கட்டத்தில் ஒரு கிலோ வாழைத்தார் ரூ.23க்கு கொள்முதல் செய்யப்பட்டது. அதன் பிறகு அதன் விலை போக போக குறைய தொடங்கியது.
இந்த நிலையில் மாலை முதல் வாழைத்தார்கள் கிலோ ரூ.14க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாழைத்தார்களுக்கு உரமிடுவது, தண்ணீர் பாய்ச்சுவது, மருந்து தெளிப்பது, கம்பு கொடுத்து பாதுகாப்பது வரை பல செலவுகள் இருக்கின்றன. இந்த பகுதியை பொறுத்தவரை வங்கியில் கடன் வாங்கியும், நகையை அடகு வைத்தும் பலர் வாழைகளை பயிர் செய்துள்ளனர். இப்படி விலை இறங்கி விட்டதால் அவர்களில் பலர் கலக்கத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications