பங்காரு அடிகளார் மகன் தாக்கிய மாணவருக்கு வேறு கல்லூரியில் தேர்வு எழுத ஹைகோர்ட் அனுமதி
மேல்மருவத்தூர் கல்லூரியில் நடைபெறும் சீர்கேடுகள் குறித்து முகநூலில் பதிவிட்டதாக மாணவர் விஜய் என்பவரை பங்காரு அடிகளாரின் மகன் செந்தில் குமார் தாக்கிய விவகாரத்தை தொடர்ந்து அவர் வேறு கல்லூரியில் தேர்வு எ
சென்னை: மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து முகநூலில் பதிவிட்ட மாணவன் தாக்கப்பட்டதை தொடர்ந்து அவர் வேறு கல்லூரியில் தேர்வு எழுத உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் சிவசுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் விஜய். இவர் மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் கெமிக்கல் என்ஜீனியரிங் படித்து வந்தார். இந்நிலையில் தன் கல்லூரியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விஜய் முகநூலில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இதையறிந்த பங்காரு அடிகளாரின் மகன் செந்தில்குமார், கல்லூரி நிர்வாகத்தைச் சார்ந்த சக்திக்கண்ணன், வழக்கறிஞர் ஜெயமணி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் மாணவனின் வகுப்பறைக்கு சென்று அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் கல்லூரி நிர்வாகம் குறித்து தகவல்களை வெளியே கூறினால் இதுதான் கதி என்று மற்ற மாணவர்களையும் எச்சரித்தனர்.

புகார் பெற மறுப்பு
இதுதொடர்பாக அளித்த புகாரை பெற்றுக் கொள்ள மேல் மருவத்தூர் போலீஸார் மறுத்துவிட்டனர். இதைத் தொடர்ந்து படுகாயமடைந்த விஜய் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

வழக்குப்பதிவு
இதைத் தொடர்ந்து விஜய்யின் தாய் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரின்பேரில் பங்காரு அடிகளாரின் மகன் செந்தில்குமார், கல்லூரி நிர்வாகத்தைச் சார்ந்த சக்திக்கண்ணன், வழக்கறிஞர் ஜெயமணி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஹைகோர்ட்டில் மனுூ
இந்நிலையில் மாணவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவரை ராமநாதபுரம் மாவட்டம் முகமது சதக் கல்லூரியில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமியின் மாணவி பாத்திமா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவு
அதை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, ராமநாதபுரம் மாவட்டம் முகமது சதக் கல்லூரியில் தேர்வு எழுத மாணவனை அனுமதிக்கும்படி அண்ணா பல்கலைகழகத்திற்கு உத்தரவிட்டனர். மேலும் மற்ற கோரிக்கைள் தொடர்பான மனுதாரரிடம் உள்ள ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூலை 4 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications