மாதவிடாயிலும் பெண்கள் கோயில் கருவறைக்குள் செல்லலாம்! "ஆன்மீக புரட்சியாளர்" பங்காரு அடிகளார்
மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மீக தலைவர் பங்காரு அடிகளாரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது. வழிபாட்டு முறையில் பல்வேறு புரட்சிகளை கொண்டு வந்தவர் இந்த செவ்வாடை சித்தர்!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் அமைந்துள்ளது. மேல்மருவத்தூரை சேர்ந்த விவசாயியான கோபால்- மீனாம்பிகை தம்பதிக்கு மகனாக பிறந்தார் பங்காரு அடிகளார்.

இவர் ஆசிரியராக பணியாற்றியவர். அதே போல் உத்தரமேரூரில் அரசு பள்ளி ஆசிரியையான லட்சுமியை திருமணம் செய்து கொண்டார். 1970 களின் தொடக்கத்தில் சக்தி பீடத்தை நிறுவி அருள்வாக்கு சொல்லி வந்தார்.
1978 ஆம் ஆண்டு அவர் தொடங்கி வைத்த வழிபாட்டு மன்றத்தையும் சேர்த்து இன்று வரை 2500 வழிபாட்டு மன்றங்களும் 25 க்கும் மேற்பட்ட சக்தி பீடங்களும் மேல்மருவத்தூர் சித்தர் பீடத்திற்கு தொண்டாற்றி வருகின்றன. இவர் அருள்வாக்கு கூறுவார். அது போல் இப்படித்தான் பூஜை செய்ய வேண்டும் என்ற நியதியை மாற்றினார்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற ஒரு விஷயம் அப்போது அரசியல் கட்சிகள் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் அனைத்து பெண்களையும் கோயில் கருவறை வரை கொண்டு சென்றவர் பங்காரு அடிகளார். மேலும் மாதவிடாய் காலத்திலும் பெண்கள் இந்த கோயிலுக்கு வரலாம் என்ற சீர்திருத்தத்தை கொண்டு வந்தவர்.
இதன் மூலம் ஆன்மீகவாதிகளை திரும்பி பார்க்க வைத்தவர் பங்காரு அடிகளார். மேல்மருவத்தூரில் அறக்கட்டளைகளைத் தொடங்கி கல்வி நிறுவனங்கள் மூலம் சேவை செய்து வருகிறார். ஆன்மீகத்தில் புரட்சி செய்தமைக்காக இவருக்கு 2019ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
பங்காரு அடிகளாரை சந்திக்காத அரசியல் கட்சித் தலைவர்களே இல்லை என சொல்லலாம். அந்த அளவுக்கு அனைவருடனும் நட்பு பாராட்டி வந்தவர். இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட அவருக்கு அக்டோபர் 19ஆம் தேதி மாலை மாரடைப்பு ஏற்பட்டு அவர் காலமானார்.
அப்போது அவருக்கு வயது 83. அவருடைய இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் பல்வேறு பக்தர்கள் மேல்மருவத்தூருக்கு வந்து அம்மா, அம்மா என அழுத் காட்சி, குழந்தை, அம்மாவை இழந்தால் எப்படி அழுமோ அப்படி இருந்தது. மேலும் தனக்கு இறுதி சடங்கு எங்கே நடக்க வேண்டும் என்பதை கூட பங்காரு அடிகளார் முன்கூட்டியே அறிவித்திருந்தார்.
அந்த இடத்திலேயே அவருக்கு இறுதி சடங்குகள் நடந்தன. பங்காரு அடிகளாரின் கற்சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சுமார் 450 கிலோ எடை கொண்ட கருங்கற்களால் செய்யப்பட்டது. இந்த சிலைக்கு செவ்வாடை உடுத்தப்பட்டுள்ளது. குரு பீடத்தில் இந்த சிலையானது கடந்த 17ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்று அந்த சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் அடிகளார் இறந்து இன்றோடு ஓராண்டு ஆன நிலையிலும் அவருடைய இறப்பை ஏற்க முடியாமல் பக்தர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications