நெல்லையில் "கரடி.." அதிகாலையில் ஊருக்குள் எண்ட்ரி.. கடித்து குதறியதில் பெண் காயம்.. தேடும் வனத்துறை
தென்காசி: நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் அதிகாலையில் ஊருக்குள் புகுந்த கரடி ஒன்று அங்கு வீட்டு முற்றத்தில் கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண்ணை கடித்து தாக்கியது. இதில் அந்த பெண் காயம் அடைந்துள்ளார். இதற்கிடையே கரடி ஊருக்குள் சுற்றித்திரியும் சிசிடிவி காட்சியும் வெளியிடப்பட்டுள்ளது.
அதிகாலை நேரத்தில் வனத்திற்குள் இருந்து ஊருக்குள் புகுந்த கரடி, ரம்ஜான் தொழுகைக்கு சென்றவர்களையும் விரட்டியுள்ளது. தொடர்ந்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் வனத்துறையினர் கரடியை தேடி வருகின்றனர்.

ஊருக்குள் புகுந்த கரடி: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியே அமைந்துள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைகளில் புலி, சிறுத்தை, யானை, கரடி போன்ற வன விலங்குகள் அதிகமாக உள்ளன. இதனால் இதுபோன்ற வனவிலங்குகள் சில நேரங்களில் மலைப்பகுதியை ஒட்டியுள்ள ஊர்களுக்குள் புகுந்துவிடுவது வாடிக்கையாக அமைந்துவிடுகிறது. சில நேரங்களில் இந்த வனவிலங்குகளால் மனிதர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டு விடுகிறது.
அந்த வகையில் தான், அம்பாசமுத்திரம் தாலுகா கல்லிடைக்குறிச்சியில் இன்று அதிகாலை ஒரு கரடி ஒன்று புகுந்துள்ளது. சுமார் அதிகாலை 5.30 மணியளவில் ஊருக்குள் புகுந்த கரடி அங்கு வீட்டின் முற்றத்தில் கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண்ணை கடித்து குதறியது. அதிகாலை வேளை என்பதால் தூரத்தில் வந்த கரடி அந்த பெண்ணின் கண்களுக்கு புலப்படவில்லை.
அலறி துடித்த பெண்: திடீரென கரடி தாக்கியதில் அந்த பெண் அலறி துடித்துள்ளார். உடனே சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் மற்றும் பக்கத்து வீட்டினர் வந்ததால் கரடி அங்கிருந்து ஓடிவிட்டது. தொடர்ந்து அடுத்த தெருவிற்குள் நுழைந்த கரடி அங்கு ரம்ஜான் தொழுகைக்காக சென்றவர்களை விரட்ட தொடங்கியது. திடீரென கரடி ஊருக்குள் புகுந்ததால் அவர்கள் அச்சமடைந்தனர். எனினும் கரடியும் அதிக மக்களை பார்த்ததும் கலைந்து ஓடியது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் அப்பகுதிகளில் உள்ள மக்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு கூறினர். தொடர்ந்து அங்குள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் கரடியின் உருவம் தெளிவாக பதிவாகியிருந்தது.
வெளியான சிசிடிவி காட்சி: அந்த வீடியோவில், கருப்பு உருவத்தில் வந்த மிருகம் ஒன்று துரத்துவதினால் ஒருவர் பதறியடித்துக்கொண்டு ஓடி வருகிறார். அவரை விரட்டியபடியே கரடி பின் தொடர்ந்து வருகிறது. தொடர்ந்து அந்த நபர் ஒரு வீட்டுக்குள் புகுந்து மறைந்துவிடுகிறார். கரடி தொடர்ந்து அந்த தெருவிற்குள் ஓடுகிறது. சில நாய்களும் கரடியை குரைத்தவாறு விரட்டுவது போன்ற வீடியோ வெளியாகி இருந்தது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவானது, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள பகுதியாகும். மேற்கு தொடர்ச்சி மலையின் தென்பகுதி இங்கு தான் அமைந்துள்ளது. களக்காடு முண்டந்துறை அருகில் தான் இருப்பதனால் அங்குள்ள விலங்குகள் அவ்வப்போது மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கிராமத்திற்குள் புகுந்துவிடும் சூழல் உள்ளது.

கரடி தாக்கியதில் 3 பேர் படுகாயம்: கல்லிடைக்குறிச்சி ஊரானது தாமிரபரணி ஆற்று பகுதியில் இருப்பதாலும், அருகில் வயல்கள், வனங்கள் இருப்பதனால் கோடை வெயிலில் தண்ணீர் தேடி வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகள் கரடி கடித்து குதறியதில் 3 பேர் படுகாயம் அடைந்திருந்தனர்.
குறிப்பாக கரடி ஒருவரை பிடித்து அவரது முகம் மற்றும் கழுத்து சதைகளை கடித்து தின்னும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி இருந்தது. தென்காசி அருகே உள்ள கடையம் பகுதியைச் சேர்ந்த வைகுண்டமணி (46) என்ற வியாபாரி, கரடியை விரட்ட முயன்ற பெத்தான்பிள்ளை பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் (40), சைலப்பன் (50) ஆகியோரையும் விரட்டி விரட்டி கடித்துவிட்டு ஓடி சென்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications