வழி தவறி கிணற்றில் விழுந்த கரடி கஷ்டப்பட்டு மீட்பு... குடுகுடுவென மீண்டும் காட்டுக்குள் ஓடியது!
நெல்லை: நெல்லை அருகே வழி தவறி தோட்டத்திற்குள் வந்த கரடி ஒன்று பல அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தது. பின்னர் அது வனத்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கங்கணாபுரத்தில் முன்னாள் எம்எல்ஏ ஒருவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அங்குள்ள கிணற்றி்ல் சுமார் 60 அடி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது 35 அடிக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது.
இந்நிலையில் அதிகாலை வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த கரடி ஓன்று எதிர்பாரவிதமாக இந்த கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்தது. அதிகாலை தோட்டத்திற்கு வந்த காவலாளி இதை கண்டு பதறி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் முருகானந்தம் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறை ஊழியர்கள் வலை மூலம் கரடியை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் வனச்சரகர் ராமசாமி, கால்நடை மருத்துவர் ரவிக்குமார், சேரன்மகாதேவி தீயணைப்பு நிலைய அதிகாரி வீரராஜ் தலைமையில் வீரரகள், வனக்காப்பாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
கயிறு ஏணி மூலம் கிணற்றில் பாதுகாப்பாக இறங்கிய தீயணைப்பு வீரர்கள் வலையை கரடி அருகே வீசி வலை மேல் கரடியை ஏறும்படி செய்தனர். கரடி வலையில் ஏறியதும் வலையை மேலே இருந்து தூக்கினர்.
கொஞ்சம் கொஞ்சமாக மேலே கொண்டு வரப்பட்ட கரடி, கிணற்றின் விளிம்பைத் தொட்டதும் ஆக்ரோசத்துடன் கரைக்கு பாய்ந்தது. இதனால் கிணற்றிற்கு அருகே நின்றிருந்த வனத்துறையினர் பயத்தில் சிதறி ஓடினர்.
மக்களின் ஆரவாரத்தினால் மிரண்ட கரடி அடர்ந்த காட்டுகள் தப்பி ஓடியது. இதனால் வனத்துறையினர் நி்ம்மதி பெருமூச்சு விட்டனர்.