பாம்பு பழிவாங்கும், கரடி பழி வாங்குமா.?- 3வது முறையாக பெண்ணைக் குறிவைத்து தாக்கிய கரடி!
நீலகிரி: பாம்பு பழிவாங்கும்... மாடு பழிவாங்கும் என்றெல்லாம் சினிமாவில் வழிவழியாக பார்த்திருக்கின்றோம்.
ஆனால், நிஜத்தில் அதுபோன்ற நிகழ்வுகள் இதுவரை இல்லை என்றுதான் நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தோம்.

ஆனால், நீலகிரியில் தனக்கு எந்தத் தீங்கும் செய்யாத பெண் ஒருவரை 3 முறை குறிவைத்து கரடி ஒன்று தாக்கியுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
டான்டீ தொழிலாளி ஞானதிலகம்:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகேயுள்ள கொளப்பள்ளி டான்டீ பகுதியைச் சேர்ந்த பெண் ஞானதிலகம். டான்டீயில் நிரந்தர தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
2 ஆண்டுக்கு முன்:
கடந்த 2 ஆண்டுக்கு முன்பு வேலைக்கு சென்று கொண்டிருந்த ஞானதிலகத்தை கரடி ஒன்று பாய்ந்து வந்து தாக்கியது. பின்னர் அவரை அப்படியே தூக்கிச்செல்ல முயன்றது.
விட்டுச் சென்ற கரடி:
அவருடன் சென்றவர்கள் சத்தம் போடவே கரடி ஞானதிலகத்தை விட்டுச்சென்றது. அதன் பின்னர் ஞானதிலகம் மிகவும் அச்சத்துடனேயே காணப்பட்டார்.
2வது தாக்குதல்:
இந்த சம்பவம் நடந்த சில மாதங்களுக்கு பின்னர் ஞானதிலகம் தேயிலை பறித்துக்கொண்டிருந்தார். அப்போது அவரை கரடி மீண்டும் தாக்கியது. பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்குப் பின்னர் வேலைக்கு செல்லவில்லை.
இழுத்துச் சென்ற கரடி:
இந்த நிலையில் கடந்த வாரம் ஞானதிலகம் வீட்டின் முன்பு துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கரடி அவரை தரதரவென இழுத்துச் சென்றது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பொதுமக்கள் திரண்டு வருவதைப்பார்த்த கரடி ஞானதிலகத்தை விட்டு விட்டு தப்பிச்சென்றது.
வினோத கரடி:
காயமடைந்த ஞான திலகம் கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அச்சத்தில் கிராம மக்கள்:
ஒரே பெண்ணை கரடி 3வது முறையாக குறிவைத்து தாக்குவது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வினோத நிகழ்வு குறித்து மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications