சிம்பு-அனிருத் உருவப்படங்கள் எரிப்பு, செருப்படி: குவியும் புகார்கள்
சென்னை: கெட்ட வார்த்தையோ... அச்சில் ஏற்ற முடியாத வார்த்தையோ சினிமாவில் வசனமாக பேசினால் 'பீப்' என்ற ஒலி கேட்கும். ஆனாலும் பல விசயங்களுக்கு நமக்கு அர்த்தம் தெரியாமல் இருக்காது. அதேபோல மகா மட்டரகமான ஒரு பாடலை எழுதி, அதற்கு இசையமைத்து பாடி அதனை இணையத்தில் உலாவ விட்டிருக்கின்றனர்.
தமிழ் சினிமா உலகில் பிரபலமாகி வந்த அனிருத் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி வருவது வாடிக்கையாகி வருகிறது. சிம்புவைப் பற்றி சொல்லவே வேண்டாம், அது வம்பு என்று தெரிந்த விசயம்தான். இந்த இரண்டு சர்ச்சைக்குரிய நபர்களும் இணைந்து வெளியிட்டதாகக் கூறப்படும் பீப் சாங் குறித்து தமிழகம் முழுக்க கண்டன குரல்கள் எழுந்துள்ளன.
சென்னை, கோவையில் தொடங்கி தூத்துக்குடி வரை எதிர்ப்பு வலுத்து வருகிறது. கோவையில் செருப்படி கொடுத்த மாதர் சங்கத்தினர் தூத்துக்குடியில் அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் சிம்பு-அனிருத் உருவப் படங்களை எரித்துப் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

மகா மட்டமான பாடல்
இசையமைப்பாளர் அனிருத் இசையில், நடிகர் சிம்பு பாடியுள்ளதாக சமூக வலைத் தளங்களில் பீப் சாங் வெளியாகியுள்ளது. அந்தப் பாடலில் பெண்களை இழிவுப்படுத்தும் விதத்தில் மிகவும் ஆபாசமான வார்த்தைகள் இடம் பெற்று இருப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து குற்றச்சாட்டும் கண்டனமும் எழுந்து வருகிறது. தமிழகம் முழுவதும் மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் இறங்கியுள்ள நிலையில் பெண்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமிர் விளக்கம் கொடுத்த சிம்பு
இதற்கு பதிலளித்த சிம்புவோ, "நான் எனது வீட்டின் படுக்கையறையிலும், பாத்ரூமிலும் என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதை எட்டிப் பார்க்கும் அதிகாரம் நான் யாருக்கும் அளிக்கவில்லை. என்னைக் கேள்வி கேட்பவர்கள் வீடுகளில் நான் கேமராவை வைத்து அவர்கள் பண்ணும் விஷயங்களைப் பார்த்து நீங்கள் ஏன் இப்படி எல்லாம் பண்ணுகிறீர்கள் என்று கேட்டால் என்னவாகும்? யாருடைய கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது. அதேபோல், என்னுடைய பணியைப் பற்றி குறை சொல்பவர்கள் யாருக்கும் நான் பதில் வேண்டிய அவசியமில்லை" என்று கூறியது மகளிர் அமைப்பினரின் கோபத்தை மேலும் அதிகரித்துள்ளது.

கோவை கமிஷனர் அலுவலகத்தில் புகார்
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜூவிடம், இது குறித்த முதல் புகார் பதிவானது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ராதிகா தலைமையில் மாதர் சங்கத்தினர் புகாரை அளித்திருந்தனர். தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாச வார்த்தைகளால் பெண்களை அவமானப் படுத்துதல், பெண்களுக்கு எதிராக தவறான கருத்துகளை வெளியிடுதல் போன்ற குற்றங்களை செய்திருப்பதாக (க்ரைம் எண் :103/2015) இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டது.

சென்னை கமிஷனரிடம் புகார்
இந்நிலையில் அனிருத், சிம்பு இருவர் வீடும் சென்னையில் இருப்பதால் சென்னை போலீஸ் கமிஷனரிடமும்., போலீஸ் டி.ஜி.பி.யிடமும் புகார் கொடுக்க பல்வேறு மகளிர் அமைப்புகள் நேற்று முதலே தீவிர வேலைகளில் இறங்கின. தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கத்தின் சார்பில் இன்று(திங்கள்) சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி தலைமையில் ஏராளமான பெண்கள் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

தேசிய பாதுகாப்பு சட்டம்
பெண்களை இழிவு படுத்தும் நோக்கத்திலேதான் இப்படியொரு பாடலை திட்டமிட்டே எழுதி பாடி வெளியிட்டுள்ளனர்.இதற்காக துளியும் வருத்தம் தெரிவிக்காமல் தங்களின் செயலுக்கு நியாயம் கற்பித்து தங்களை காப்பாற்றிக் கொள்ள முயற்சிப்பதாக வருகிற தகவல்கள் மிகுந்த வேதனை அளிக்கிறது. ஒவ்வொருவர் வீட்டிலும் உயர்வாக மதித்து போற்றிடும் பெண்களை இழிவு படுத்தியிருக்கும் சிம்பு, அனிருத் இருவரையும் சமூக நலன் கருதி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்" என்று எஸ்.ஏ.பொன்னுசாமி கூறியுள்ளார்.

முன் ஜாமீன் பெற முயற்சி
அதே வேளையில் சிம்பு, அனிருத் தரப்பில் கைது நடவடிக்கையை தடுக்க முன்ஜாமீனுக்கு முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது மகனைக் காப்பாற்ற டி.ராஜேந்தர் முயற்சி செய்வதாகவும் கூறப்படுகிறது.

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்
தூத்துக்குடியில் பழைய பேருந்துநிலையம் முன்பாக அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் சிம்பு அனிருத் உருவப் படங்களை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிம்பு, அனிருத்தை கைது செய்து கோரி முழக்கமிட்டனர்.

சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
அனிருத்தும், சிம்புவும் எங்கேனும் பொதுநிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது செருப்படி மற்றும் துடைப்பத்தால் அடிக்கும் சம்பவத்தை நிறைவேற்ற பெண்கள் மட்டுமின்றி சமூக அக்கறை கொண்ட ஆண்களும் காத்திருக்கின்றனர். அதே நேரத்தில் பீப் பாடலை, யுடுயூப், வாட்ஸ் அப்பில் வெளியிட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விருதுநகரில்
இதற்கிடையே, விருதுநகரில், அனிரூத்,சிம்புவை கண்டித்து மாதர் சங்கம்,வாலிபர் சங்கம் சார்பில் உருவ பொம்மை எரித்து கண்டனம் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications