மதுரை: தலை துண்டிக்கப்பட்ட இளைஞரின் உடல் மீட்பு
மதுரை: மதுரை தத்தனேரி பகுதியில் சாக்கடைக்குள் தலை துண்டிக்கப்பட்ட இளைஞரின் உடல் மீட்கப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரப்பாளையம், கூடல்நகர் செல்லுகின்ற கிளைச்சாலைப் பகுதியில் அரசு புறம்போக்கு மைதானம் ஒன்று உள்ளது. இங்குள்ள கழிவுநீர் குட்டையிலிருந்து கடந்த சில நாட்களாக துர்நாற்றம் வீசியதால், அதுகுறித்து அந்தப்பகுதி பொதுமக்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, கூடல்புதூர் காவல்துறையினர் அங்கிருந்த குட்டையில் தேடியபோது, அதில், சாக்கு மூட்டையொன்று கிடந்தது. அந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது, தலை துண்டிக்கப்பட்டு, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் உடல் இருந்தது.
அந்த இளைஞர் கொலை செய்யப்பட்டு பத்து நாட்களுக்கு மேல் இருக்கும் என்கின்றனர் காவல்துறையினர். மேலும், கொலை செய்யப்பட்டவர் யார், எந்த ஊர், கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற கொலை சம்பவங்கள் மதுரையில் தொடர்ந்து நிகழந்து வருவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.