அந்த ராஜினாமா டிராமாவே... ஜோசியப்படிதானாமே...
சென்னை: தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திய ராஜினாமா விவகாரம் உண்மையிலே பக்கா நாடகமாம்...அதுவும் 'ஆலய' ஜோதிடர்கள் அறிவுரைப்படி அரங்கேற்றப்பட்டதுதானாம்.
தேர்தலில் முட்டை வாங்கிய பெரிய கட்சியின் லெப்டினன்ட் , முடிவுகள் வந்து மூன்று நாட்கள் கழித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார் என்று தகவல்.. அப்படியெல்லாம் கொடுக்கவே இல்லை என்று கேப்டன் மறுக்க.. நேற்று முழுவதும் ஒரே பரபரப்புதான்..
இந்த பரபரப்பு திட்டமிட்டே உருவாக்கப்பட்டதுதானாம்.. கட்சியில் போஸ்டிங் என்னவோ கணக்குப் பிள்ளையாக இருந்தாலும் ஆக்டிங் என்னவோ ஆல் இன் ஆல் அழகுராஜாதான்.
அதுவும் தேர்தலில் சூறாவாளியாக சுழன்றடித்து அதகளப்படுத்தியதில் ஆயிரத்தெட்டு கண்ணுபட்டுவிட்டதாம்.. அதற்கு திருஷ்டி பரிகாரம் செய்தாக வேண்டும் என்று லெப்டினன்ட் வீட்டு அடுப்படி சர்க்காரிடம் ஒருவர் சொன்னாராம்.
லெப்டினன்ட் வீட்டு அடுப்படி சர்க்கார் நாள் தோறும் சென்று வணங்கும் வடை விரும்பி ஆண்டவன் கோயில் குருதான் கண்ணுபட்டு இருக்கும்.. திருஷ்டி செய்யுங்கோ என யோசனை சொன்னவராம்.
இதனால் ஜோதிடர்களிடம் லெப்டினன்ட் வீட்டு அடுப்படி சர்க்கார் ஆலோசனை கேட்டிருக்கிறார். இருக்கிற பதவியை ராஜினாமா செய்து ஒரு கடிதம் கொடுத்துவிடுங்கள்.. அந்த பதவி போன மாதிரி இருக்கும். ராஜினாமாவை வாபஸ் வாங்கினா புதுசா பதவி கிடைச்சமாதிரி இருக்கும்.. அப்படியே செய்துடுங்கோ என்று அந்த ஜோதிடரும் யோசனை தெரிவித்தாராம்.
இதன்படியேதான் நேற்று எல்லாமும் நடைபெற்றதாம்... அத்தோடு அப்படியெல்லாம் நடக்கவே இல்லை என்று சொல்கிறவர்கள் வேப்பேரி பத்திரிகை அலுவலகத்துக்கு ஏன் போன்போட்டு ராஜினாமா நாடகத்துக்கு வாங்கன்னு சொல்லி டிக்கெட் கொடுத்தார்கள் என்றும் பதில் கேள்வி எழுப்புகிறார்கள் ஊடக பட்சிகள்..
நன்னா நடத்துங்கோண்ணா!