சிசிடிவியில் சிக்காத சசிகலா செல்போனில் சிக்கியது எப்படி? பரபர பின்னணி
போயஸ்கார்டன் முதல் பரப்பன அக்ரஹார சிறைச்சாலை வரையில் சிசிடிவியில் சிக்காத சசிகலா செல்போன் வீடியோவில் எப்படி சிக்கினார் என்று அதிமுக சீனியர்கள் மத்தியில் விவாதிக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
சென்னை: எல்லா நேரத்திலும் உஷாராக சிசிடிவி கேமிரா கண்களை ஆட்களை வைத்து மூடச் செய்த சசிகலா பெங்களூரு சிறையில் செல்போனில் சிக்கியது எப்படி என்பதுதான் இப்போதைய அதிமுக சீனியர்கள் ஹாட் டாபிக்.
ஜெயலலிதா உயிரோடு இருந்த போதே, சசிகலாவுக்கு சிசிடிவி மேல் அலாதியான ஆர்வம். ஜெயலலிதாவை தனக்குத் தெரியாமல் வேறு யாராவது சந்தித்து தன்னைப் பற்றி போட்டுக் கொடுத்து விடுவார்களோ என்ற அச்சத்தில், போயஸ் கார்டன் வேதா இல்லத்தை சிசிடிவி கண்காணிப்புக்குள் கொண்டு வந்தார்.
ஆனால், அதே நேரத்தில் ஜெயலலிதாவுக்கு தெரியாமல் சசிகலா யாரையாவது வெளியே சந்திக்க சென்றால் அப்போது வேதா இல்ல சிசிடிவி கேமராவை ஆப் செய்ய தனி ஆளையும் வைத்திருந்தார் என்பது 'போயஸ் கார்டன் வாழ் மக்களுக்கு' அத்துப்படி.
கச்சிதமாக ரூட் போட்ட காக்கிகள்
ஆனால் அவரையே ரூட் போட்டு டிஐஜி ரூபா அண்ட் கோ ஷாப்பிங் பையோடு பிடித்து 'ஷாக் ' கொடுத்துள்ளது. காலாற வாக்கிங் போன நேரத்தில் கச்சிதமாக பிளான் ரெடியாகியுள்ளது என்கிறார்கள் பெங்களூரு காக்கிகள்.
மத்திய அமைச்சருடன் ரூபா டிஸ்கஸ்
டி.ஐ.ஜி. ரூபா, சிறை துறைக்கு வருவதற்கு முன்பு குற்றத் துறையில் பொறுப்பு வகித்துள்ளார்.
பெங்களூருவில் உள்ள அவரின் வீட்டுக்கு அருகே வசித்து வரும் மத்திய அமைச்சர் ஒருவர், ரூபாவுடன் சில வாரங்களுக்கு முன்பு வாக்கிங் சென்றுள்ளார். அப்போது அவரும் ரூபாவும் பல்வேறு அரசியல் களநிலவரங்கள் குறித்து விவாதித்துள்ளனர்.
விவிஐபி சலுகைகள்
அதில் ஒன்றுதான் சசிகலா பற்றிய தகவல்கள். பெங்களூரு மத்திய சிறையில், விதிகளை முழுக்க மீறி, விவிஐபி அந்தஸ்து சலுகைகளை அனுபவிப்பதை குறித்து அவர்கள் விவாதித்தனர்.
செல்போனில் சிக்கிய சசி
இதையடுத்து டி.ஐ.ஜி. ரூபா சிறைத்துறைக்கு மாற்றப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று பெங்களூரு சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக சசிகலாவை பிடிக்க வேண்டும் என்றால் என்னென்ன செய்ய வேண்டும். அதற்கு கைதிகள் உட்பட யாரையெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதெல்லாம் மிக கவனமாக திட்டமிட்டு செல்போனில் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.