தோழியுடன் இருக்க சீட் மாறி உட்கார்ந்து குண்டுவெடிப்பில் பலியான ஸ்வாதி
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பலியான ஸ்வாதி தனது தோழியுடன் இருக்க சீட் மாறி உட்கார்ந்து பலியாகியுள்ளது தெரிய வந்துள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பலியானவர் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஸ்வாதி பரச்சூரி. பெங்களூர் டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்த ஸ்வாதி தன்னுடன் பணியாற்றிய தோழி ரஜிதாவுடன் சேர்ந்து கவுகாத்தி எக்ஸ்பிரஸில் நேற்று முன்தினம் மாலை பெங்களூரில் ஏறினார்.
ரயிலில் ஏறிய ஸ்வாதியும், ரஜிதாவும் அவரவர் இடத்தில் அமர்ந்திருக்க வேண்டும்.
சீட் மாற்றி
ஸ்வாதிக்கு எஸ்-5 பெட்டியில் 9ம் எண் கொண்ட இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரோ தனது தோழி ரஜிதாவுடன் இருக்க வேண்டும் என்பதற்காக 24ம் எண் கொண்ட சீட்டில் அமர்ந்துள்ளார். ரஜிதாவின் இருக்கை அதே பெட்டியில் எண் 23 ஆகும்.
அம்மா
ரயிலில் ஏறியவுடன் ஸ்வாதி தனது அம்மாவுக்கு போன் செய்து நான் ரயிலில் ஏறிவிட்டேன், அது விரைவில் கிளம்பிவிடும். நான் நாளை மதியம் 3 மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
ரஜிதா
குண்டுகள் வெடித்தபோது ஸ்வாதி தனது இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அவரது சீட்டுக்கு அடியில் குண்டு இருந்ததால் அவர் பலியாகியுள்ளார். குண்டு வெடித்தபோது ரஜிதா இருக்கையில் இல்லை. அவர் ஒன்று டாய்லெட்டிற்கு சென்றிருக்க வேண்டும் அல்லது சாப்பிட ஏதாவது வாங்க சென்றிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
பாட்டி
ஜனவரி மாதம் முதல் சம்பளம் வாங்கிய உடன் எனக்கு என்ன வேண்டும் என்று ஸ்வாதி கேட்டாள், நீ விரைவில் திருமணம் செய்துகொள் என்றேன் என அவரது பாட்டி ராஜலக்ஷ்மி தெரிவித்தார்.
பெற்றோர்
ஸ்வாதியின் அப்பா ராமகிருஷ்ணா ஒரு விவசாயி. அம்மா காமாக்ஷி தேவி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். ஸ்வாதியின் தம்பி பிரத்யும்மா மும்மை ஐஐடியில் ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங் படித்து வருகிறார்.
ஒயிட்ஃபீல்டு
ஸ்வாதி பெங்களூர் ஒயிட்ஃபீல்டில் உள்ள ராம் சாய் ஹைடெக் விடுதியில் தங்கியிருந்தார். அவரது அறையில் தெலுங்கானவில் உள்ள கொடாடாவைச் சேர்ந்த ரஜிதா தங்கியிருந்தார்.