புற்றீசல் போல் கிளம்பும் முறைகேடுகள்.. பாரதியார் பல்கலை தொலைதூர கல்வி இயக்குநர் (பொ) மீதும் வழக்கு
உதவி பேராசிரியர் நியமன முறைகேடு வழக்கில் பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குநர் (பொறுப்பு ) மதிவாணன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை: உதவி பேராசியர் நியமனத்தில் முறைகேடு செய்ததில் பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குநர் (பொறுப்பு ) மதிவாணனுக்கும் தொடர்பு இருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பேராசிரியர் நியமனத்துக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கணபதி, ரூ.30 லட்சம் லஞ்சமாக கேட்டதாக சுரேஷ் என்பவர் கடந்த 3 தினங்களுக்கு முன் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் அதிகாரிகள் துணை வேந்தர் கணபதியை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை சுரேஷிடம் இருந்து கணபதி பணத்தை பெற்றபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் கணபதி கையும் களவுமாக பிடிபட்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் பணம் பெறுவதற்கு புரோக்கர் போல் செயல்பட்டதாக பல்கலை வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். மேலும் கணபதியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியபோது தடயங்களை அழிக்க முற்பட்டதாக அவரது மனைவி சொர்ணலதாவும் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து இந்த முறைகேட்டில் பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குநர் (பொறுப்பு ) மதிவாணனுக்கும் தொடர்பிருப்பதாக வந்த தகவலை அடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் இன்று அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் அவரிடம் விசாரணை நடத்தவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர். முறைகேடு விவகாரத்தில் இன்னும் எத்தனை பூதங்கள் கிளம்புமோ என்ற அதிர்ச்சியில் மக்கள் உறைந்துள்ளனர்.