சென்னை தி.நகரில் 7 அடி ஆழத்துக்கு சாலையில் திடீர் பள்ளம்.. சிக்கிய தண்ணீர் லாரி
சென்னை: தி.நகர் ஜி.என்.ஷெட்டி சாலையில், சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் மழை, வெள்ள பாதிப்பு ஏற்பட்டதற்கு பிறகு ஆங்காங்கு சாலையில் திடீர் பள்ளங்கள் தோன்றி மக்களை அச்சுறுத்தி வருகின்றன.

மத்திய கைலாஷ் பகுதியில் ஏற்பட்ட பள்ளத்தால் உருவான பீதி மறைவதற்குள், தி.நகர் ஜி.என்.ஷெட்டி சாலையில் இன்று மிகப்பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. அந்த வழியாக சென்ற தண்ணீர் லாரி அந்த பள்ளத்தில் சிக்கி அசைய முடியாமல் நின்றது.
தகவலறிந்த மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் அங்கு வந்து பரிசீலனை நடத்தினர். மீட்பு லாரி மூலம், தண்ணீர் லாரி அகற்றப்பட்டது.
சுமார் 7 அடி ஆழமும், 5 அடி சுற்றளவும் கொண்ட ராட்சச பள்ளமாக அது காட்சியளிக்கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, மண் சரிவால்தான் இதுபோன்ற பள்ளம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பயப்பட வேண்டாம் என்று தெரிவித்தனர்.

முதல்கட்டமாக மணலை போட்டு பள்ளத்தை நிரப்பும் பணி நடந்தது. பிறகு, தார்பூசி, சாலை அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
திடீர் சாலை பள்ளங்கள் சென்னைவாசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தரம் குறைந்த சாலைகள் இதற்கு காரணமா, அல்லது நில அமைப்பில் மாறுபாடு ஏற்படுகிறதா என்ற சந்தேகத்தை ஆய்வாளர்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும்.












Click it and Unblock the Notifications