தமிழ்நாட்டில் சட்டக் கல்லூரியை தனியார் நடத்த தடை: சட்டசபையில் மசோதா தாக்கல்!
சென்னை: தமிழ்நாட்டில் சட்டக் கல்லூரியை தனியார் நடத்துவதற்கு தடை விதிக்க வகை செய்யும் மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
சட்டசபையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று தாக்கல் செய்த மசோதாவில் கூறி இருப்பதாவது:
குறைந்த செலவில் தரமான சட்டக் கல்வியை வழங்க ஏதுவாக மாநிலத்தில் படிப்படியாக போதிய எண்ணிக்கையிலான அரசு சட்டக் கல்லூரிகளை நிறுவ முடிவு எடுத்துள்ளது. பொருளாதாரம், சமூக ரீதியில் நலிவுற்ற பிரிவினர்களுக்கு தனியாரால் குறைந்த செலவில் தரமான சட்டக் கல்வியை அளிக்க முடியவில்லை என்பதையும் திறம்பட தொடர்ந்து நிர்வாகம் செய்ய முடியவில்லை என்பது கடந்த கால அனுபவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
எனவே தனியார்கள் சட்டக்கல்லூரிகள் நிறுவுவதை தடை செய்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கேற்ப சட்ட திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.