அரசு பள்ளிகளுக்கு வருது பயோமெட்ரிக் வருகைப் பதிவு... இனி ஆசிரியர்கள் ஏமாற்ற முடியாது!!
சென்னை: கார்ப்பரேட் நிறுவனங்களில் கை விரல் ரேகை வைத்து பயோ மெட்ரிக் முறையில் வருகைப் பதிவு செய்யப்படுவது போல இனி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறையை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. பள்ளிக்கு லேட்டாக வந்து கையெழுத்து போடும் சில ஆசிரியர்களுக்கு இது அதிர்ச்சியளிக்க கூடிய அறிவிப்புதான் என்றாலும் இது அவசியமான ஒன்று பலரும் கருத்து கூறியுள்ளனர்.
பல தனியார் நிறுவன அலுவலகங்களில் ஊழியர்கள் பணிக்கு வரும்போது அடையாள அட்டையை ஆட்டோ மெட்டிக் பஞ்சிங் மிஷினில் பதிவு செய்து செல்கிறார்கள். அதிலும் ஏமாற்ற முடியும் என்பதால் சில அலுவலகங்களில் விரல் ரேகையை வருகை பதிவு கருவியில் பதிவு செய்கிறார்கள். மேலும் சில அலுவலகங்களின் முன்பு வைக்கப்பட்டுள்ள கேமரா முன்பு நின்றாலே ஊழியர்களின் வருகை பதிவாகி விடுகிறது.
இப்போது இந்த நவீன வருகை பதிவு முறையை கல்வி துறையிலும் தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. பெரம்பலூர் மாவட்டம் 4 ஒன்றியங்கள் கொண்ட சிறிய மாவட்டம். இந்த மாவட்டத்தில் தமிழகத்திலேயே முதல்முறையாக முன்னோடி திட்டமாக 50 அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் வருகையை மாவட்ட நிர்வாகத்தின் இணையதளம் வாயிலாக பராமரிக்கும் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை அமல்படுத்தப்பட்டது.
பள்ளிக்கு சென்றவுடன் ஆசிரியர் பயோமெட்ரிக் சிஸ்டத்தின் மீது தனது கைவிரலை வைத்தவுடன் அதனுடன் இணைக்கப்பட்ட கணினியில் ஆசிரியரின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விபரங்கள் திரையில் தெரிகிறது. பள்ளி அலுவலக நாட்களில் தினமும் காலை 8.30 மணி முதல் 9.20க்குள்ளும், மாலை 4.15 மணி முதல் அரைமணிநேரமும் பயோமெட்ரிக் சிஸ்டம் செயல்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் வருகையும் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யும் முறை சோதனை அடிப்படையில் 6.7.2016 அன்று அமல்படுத்தப்பட்டது. இதற்கு மாணவர்களும், ஆசிரியர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதே முறையை தமிழகம் முழுவதும் அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
பல கிராமங்களில் இருக்கும் தொடக்கப்பள்ளிகள் ஓர் ஆசிரியர் பள்ளிகளாக தான் இருக்கின்றன. இது பல ஆசிரியர்களுக்கு வசதியாகிவிட்டது. காலை ஓன்பது மணிக்கு பள்ளியில் இருக்கவேண்டிய ஆசிரியர்கள், பதினோரு மணிக்கு பள்ளிக்கு வரும் அவல நிலைகள் தமிழக கிராமங்களில் இன்றும் நிலவி வருகிறது.
பல கிராமங்களில் ஆசிரியர்கள் பள்ளிக்கே வருவதை தவிர்த்துவிட்டு, அந்த கிராமத்தில் பட்டப்படிப்பு படித்தவர்களை இவர்கள் குறைந்த ஊதியம் கொடுத்து ஆசிரியர்களாக இவர்களே நியமிக்கும் கொடுமைகள் எல்லாம் தமிழகத்தில் நடந்தேறி வருகிறது.
இது குறித்து தொடர்ந்து கல்வித் துறைக்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்தால், இதற்கு மாற்றுத் தீர்வு காண அதிரடி உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
முதல்வர் உயர்கல்வி, மற்றும் பள்ளி கல்வி துறை குறித்து 110 விதியின் கீழ் நேற்று இருபத்தி நான்கு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒரு அறிவிப்பில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டை கையாளுவதில் தற்போது உள்ள கையெழுத்திடும் முறையை மாற்றி, பயோமெட்ரிக் முறையில் வருகைபதிவு செய்யும் புதிய முறை கொண்டுவரப்பட உள்ளது. இதற்காக 45.57 கோடி ஒதுக்கபடுவதாக அறிவித்துள்ளார்.
பயோமெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்யும் போது, குறித்த நேரத்தில் பள்ளிக்கு வரவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதே போல் பள்ளி முடிந்து செல்லும்போது கைரேகையை வைத்து பதிவு செய்யும் நிலை இருப்பதால், நினைத்த நேரத்திற்கு பள்ளியை விட்டு கிளம்பவும் முடியாது. மேலும் வருகைநேரத்தை தாண்டி வருகைப்பதிவேட்டில் பதிவு செய்தால், அவர்களது ஊதியம் குறையும் வாய்ப்பு இருப்பதால், கால தாமதத்தை இனி தொடர முடியாத நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
புதிய திட்டம் குறித்து, கருத்து கூறியுள்ள பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பயோ மெட்ரிக் திட்டம் வருவது வரவேற்கத்தக்கது. இந்த திட்டம் மூலம் மாணவர்களின் வருகைப்பதிவு, மின்னணு கல்வி மேலாண்மை, கல்வி உதவித்தொகை, பஸ் பாஸ் போன்ற திட்டங்களுக்கு தகவல் தொகுப்பாக பயன்படுத்த எளிதாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.
அதே நேரம், பயோ மெட்ரிக் கருவியில், வருகையை பதிவு செய்து விட்டு, ஆசிரியரோ, மாணவரோ, பள்ளியிலிருந்து வெளியே சென்று விட்டு, மாலையில் வந்து மீண்டும் பதிவு செய்ய வாய்ப்புள்ளது. இதுபோன்ற விதி மீறலுக்கும், முற்றுப்புள்ளி வைக்கும் வகை யில், இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.