கொஞ்ச நாளைக்கு இந்தப் பக்கமே வராதேள்.... சுப்பிரமணியம் சாமிக்கு பாஜக போட்ட தடை!
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி இறுதியாகும் வரை தமிழகத்தில் நடைபெறும் எந்த பாஜக கூட்டத்திலும், மாநாட்டிலும் தலை காட்ட வேண்டாம் என்று சுப்பிரமணியம் சாமிக்கு பாஜக மேலிடம் தடை விதித்துள்ளதாம்.
இந்த உத்தரவின் காரணமாகவே திருச்சியில் நடந்த நரேந்திர மோடி கூட்டத்துக்குக் கூட சாமியைக் கூப்பிடவில்லையாம்.
இதனால் கோபித்துக் கொண்டு வெளிநாட்டுக்குப் போய் விட்டாராம் சுப்பிரமணியம் சாமி.

பாஜகவில் சாமி
ஜனதாக் கட்சிக்காரரான சாமி, சமீபத்தில்தான் பாஜக கூட்டணியில் இணைந்தார். இணைந்தது முதலே அவருக்கு சோதனை அதிகமாகவே இருக்கிறதாம்.

வாஸ்து ஓ.கே.. ஆனால் வாய் சரியில்லையே...!
சுப்பிரமணியம் சாமி கட்சிக்கு வந்ததெல்லாம் சரிதான்... ஆனால் அவரது வாய் சரியில்லையே என்று தமிழக பாஜகவினர் புலம்புகின்றனராம்.

என்னை ஏன் கூப்பிடலை...
இந்த நிலையில்தான் திருச்சி மோடி கூட்டத்துக்கு சாமிக்கு அழைப்பு போகவில்லையாம். இதனால் விசனமாகி விட்ட அவர் நேரடியாக மோடிக்கே போன் போட்டு விட்டாராம்.

பரவாயில்லை நீங்க வாங்க...
என்னை கூப்பிடவி்ல்லையே என்று அவர் மோடியிடம் வருத்தப்பட்டாராம். அதைக் கேட்ட மோடி, அதனால் என்ன நான் சொல்கிறேன், நீங்க வாங்க என்றாராம். ஆனால் அழைப்பே அனுப்பாத நிலையில் நானாக வருவது எப்படி என்று கூறி வர மறுத்து விட்டாராம்.

பாரீன் பயணம்...
அத்தோடு நில்லாமல், மாநாட்டின்போது தமிழகத்தில் இருக்க விரும்பாமல் ஏதோ ஒரு வெளிநாட்டுக்குப் போய் விட்டாராம்.

அதனால்தானே கூப்பிடலை...
இதையே சாக்காக கொண்ட தமிழக பாஜக நிர்வாகிகள், சாமி பாரீன் போய் விட்டதால்தான் அவரைக் கூப்பிட முடியவில்லை என்று மேலிடத்திற்கு சால்ஜாப்பு சொல்லி விட்டனராம்.

கொஞ்ச நாளைக்கு வராதீங்க
இதையடுத்து சிக்கல் எதற்கு என்று யோசித்த கட்சி மேலிடம், கொஞ்ச நாளைக்கு தமிழகத்தில் எந்தக் கூட்டம் நடந்தாலும் அங்கு போக வேண்டாம். கூட்டணி இறுதியாகட்டும், பார்த்துக் கொள்ளலாம் என்று சாமிக்கு தடை போட்டு விட்டதாம்.
சாமிக்கே சோதனையா....!

செல்லமாக கோபித்த நிர்மலா
அதேபோல நிர்மலா சீதாராமனையும் அழைக்கவில்லையாம். இவர் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் ஆவார். தனக்கு அழைப்பு வராவிட்டாலும் கூட அவராகவே கூட்டத்துக்கு வந்தாராம். வந்தவர், இது என் பிறந்த வீடு, பிறந்த வீட்டுலயே மரியாதை இல்லைன்னா எப்படி? நீங்க அழைக்காவிட்டாலும் பரவாயில்லைன்னு நானே வந்திருக்கேன் என்று செல்லமாகக் கோபப்பட்டுக் கொண்டாராம்.

வெங்கையாவையும் கூப்பிடலையாமே...
அதேபோல தமிழக விவகாரங்களில் அதிக அக்கறை செலுத்தும், கிட்டத்தட்ட தமிழ்நாட்டுக்காரர் போலவே செயல்படும் வெங்கையா நாயுடுவையும் கூட அழைக்கவில்லையாம். இதனால் அவரும் முகம் கறுத்துப் போய் காணப்படுகிறாராம்.












Click it and Unblock the Notifications