நாஞ்சில் சம்பத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினர்! கூண்டோடு தூக்கிய போலீஸார் !கும்பகோணத்தில் பரபரப்பு!
கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நாஞ்சில் சம்பத்தை பாஜகவினர் முற்றுகையிட முயன்ற நிகழ்வு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாஞ்சில் சம்பத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
ரோட்டரி சங்கம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக நாஞ்சில் சம்பத் கும்பகோணம் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

நாஞ்சில் சம்பத்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து நாஞ்சில் சம்பத் விமர்சித்து வந்தார். இதனிடையே பொதுக்கூட்டங்களில், பாஜக தலைவர்களை ஒருமையில் தரக்குறைவாக பேசி வருவதாக கூறி, இவர் மீது பாஜகவினர் கடும் கொந்தளிப்பில் இருந்தனர்.

கண்டன முழக்கம்
தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்து விடுதியில் தங்கியிருந்ததார் நாஞ்சில் சம்பத். இந்த தகவலை அறிந்து நாஞ்சில் சம்பத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக மாவட்டத் தலைவர் சதீஷ் தலைமையில் ஏராளமான பாஜகவினர் குவிந்து முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். தொடர்ந்து பாஜகவினர் நாஞ்சில் சம்பத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி முழக்கமிட்டனர்.

திமுகவினர் பாதுகாப்பு
நாஞ்சில் சம்பத்தை பாஜகவினர் முற்றுகையிடுகிறார்கள் என்ற தகவலை அறிந்து சில நிமிடங்களில் அங்கு திமுகவினரும் திரளத் தொடங்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. கருத்தை கருத்தால் எதிர்கொள்வதை விடுத்து தனி மனிதர் மீது கும்பலாக வந்து தாக்குதல் நடத்த முயல்வது கோழைத்தனம் என திமுகவினரும், நாஞ்சில் சம்பத்தின் சொற்பொழிவுக்கு ரசிகர்களாக இருப்பவர்களும் வாதிட்டனர். காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததோடு நாஞ்சில் சம்பத் தங்கியிருக்கும் விடுதிக்கு பாதுகாப்பும் அளித்து வருகின்றனர்.

பொருட்படுத்தவில்லை
பாஜகவினர் தாம் தங்கியிருந்த விடுதியை முற்றுகையிட முயன்ற நிகழ்வை நாஞ்சில் சம்பத் ஒரு பொருட்டாகவே கருதவில்லையாம். இது போன்ற வெற்றுக்கூச்சல்களை எத்தனையோ முறை தாம் பார்த்திருப்பதாகவும் தனது பேச்சை யாராலும் நிறுத்த முடியாது எனவும் அங்கிருந்த திமுகவினரிடம் பேசும் போது கூறியிருக்கிறார்.
இதனிடையே நாஞ்சில் சம்பத்தை பாஜகவினர் முற்றுகையிட முயன்ற நிகழ்வால் கும்பகோணத்தில் அவர் தங்கியிருந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications