வில்லங்கமாகும் "வெள்ளையம்மாள்"... அதிமுகவினர் மிரட்டலால் விலகியதாக தமிழிசை குற்றச்சாட்டு!
சென்னை: வெள்ளையம்மாள் விவகாரம் தமிழக அரசியலில் வில்லங்கமாகி வருகிறது. நெல்லை மாநகராட்சி மேயர் இடைத் தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அவர் திடீரென விலக, அதிமுகவினர் கொடுத்த மிரட்டலும், நெருக்கலும்தான் காரணம் என்று பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டவர் வெள்ளையம்மாள். அவரும் கட்சியினர் புடை சூழ சந்தோஷமாகத்தான் வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தார். வேட்பு மனுவைத் தாக்கல் செய்த கையோடு நேற்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனையும் சந்தித்து வாழ்த்தும், ஆசியும் பெற்றார்.
இந்த நிலையில் அவரை கடத்த அதிமுகவினர் திட்டமிட்டுள்ளதாக உள்ளூர் பாஜகவினர் திடீர் பரபரப்பைக் கிளப்பினர். இதனால் வெள்ளையம்மாளை வெளியில் பார்க்க முடியவில்லை. அவர் பொன்.ராதா வீட்டில் தஞ்சமடைந்திருப்பதாகக் கூட செய்திகள் கூறின.
ஆனால் இன்று திடீரென தனது வேட்புமனுவை வாபஸ் பெற்று விட்டு பாஜகவினருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து விட்டார் வெள்ளையம்மாள். இதனால் பாஜகவினர் குழப்பமடைந்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில், வெள்ளையம்மாள் விவகாரம் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும்.
அவர் கடத்தப்படும் அச்சுறுத்தல் இருந்ததாக உள்ளூர் பாஜக தரப்பி்ல கூறப்படுகிறது. மேலும் அதிமுக தரப்பிலிருநது அவருக்கு மிரட்டலும், அச்சுறுத்தலும், நெருக்கடியும் ஏற்பட்டதால்தான் அவர் விலகியுள்ளார் என்றார்.
ஆனால் விசாரணை வரைக்கும் வெள்ளையம்மாள் காத்திருக்கப் போவதில்லையாம். அவர் இன்று மாலை சென்னை சென்று முதல்வர் ஜெயலலிதாவை நாளை சந்தித்து அதிமுகவில் இணையப் போவதாக நெல்லை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிரட்டல்...
வெள்ளையம்மாளுக்கு கடந்த சில நாட்களாகவே மிரட்டல் இருந்து வந்தது. அவரை தைரியப்படுத்தி கட்சி நிர்வாகிகள் ஊக்கம் அளித்து வந்துள்ளனர்.

சென்னை வருகிறார்...
துணைமேயர் மூலம் நேற்றே அவரை மிரட்டி அழைத்து சென்று வாபஸ் பெற வைத்துள்ளனர். இன்று அவரை சென்னைக்கு அழைத்து வருவதாகவும், எங்களுக்கு நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது.

அனைத்துப் பகுதிகளிலும்...
வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு ஒப்புதல் பெற்று களத்தில் நிற்பவர்களை இந்த மாதிரி மிரட்டுவது தேர்தல் நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் நடப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

ஜனநாயக படுகொலை...
தேர்தலை ஜனநாயக முறைப்படி சந்திக்க வேண்டும். எங்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையில்தான் தேர்தலை சந்திக்கிறோம். இப்போது நடக்கும் சம்பவங்கள் மிகப்பெரிய ஜனநாயக படுகொலை. மிக மோசமான பின்விளைவுகளை உருவாக்கிவிடும்.

முதல்வரின் தலையீடு...
எனவே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள முதலமைச்சருக்கு எனது வேண்டுகோள், ‘‘உடனே தலையிட்டு தேர்தல் களத்தை எதிர்கொள்ள அவர்கள் கட்சியினரை தயார்படுத்த வேண்டும்''. எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் பாரதீய.ஜனதா இந்த தேர்தல் களத்தை சந்திக்கும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications