யாரிடமும் பேரம் பேச வேண்டிய நிலையில் பாஜக இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: எந்த கட்சியுடனும் பேரம் பேச வேண்டிய நிலையில் பாஜக இல்லை என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தேமுதிகவுடன் பாஜக பேரம் பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறிய குற்றச்சாட்டுக்கு பாஜக மூத்த தலைவரும், மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேமுதிகவுடன் பாஜக பேரம் பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறிய குற்றச்சாட்டு மோசமானது. எந்த ஆதாரமும் இல்லாமல் இப்படி ஒரு குற்றச்சாட்டை வைகோ முன்வைத்துள்ளார். இதன் மூலம், வைகோ மிக மோசமான முறையில் தேமுதிகவை அவமதித்துள்ளார்.
யாரிடமும் பேரம் பேச வேண்டிய நிலையில் பாஜக இல்லை.சந்தை பேரம் பேசுவதற்கு மற்றவர்கள் தயாராக இருக்கலாம். நாங்கள் தயாராக இல்லை. விலை பேசக் கூடிய ஒரு பொருளாக தேமுதிக இருக்கிறது என்று சொல்வதே எவ்வளவு பெரிய மரியாதை என்று அவர்கள் புரிந்துகொண்டால் சரி. தேமுதிகவை குறைத்து மதிப்பிட்டதையே வைகோவின் கருத்து உணர்த்துகிறது. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.












Click it and Unblock the Notifications