ப.சிதம்பரத்தைக் கண்டு பாஜக அலறுவது ஏன்?
முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சிதம்பரத்தின் வியூகங்களால் அதிர்ந்து போய்தான் டெல்லி சிபிஐ சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் அதிரடி வியூகத்தை பார்த்து அலறிப் போய்தான் சிபிஐ சோதனை நடத்தப்பட்டதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார்; ரஜினிகாந்த் கட்சியும் காங்கிரஸும் இணைந்து போட்டியிடும் திட்டம் இருக்கிறது; ப. சிதம்பரம்தான் முதல்வர் வேட்பாளர் என கராத்தே தியாகராஜன் கொளுத்திப் போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தலைவர்கள் சங்கமம்
இது தொடர்பாக நாம் விசாரித்த போது ப.சிதம்பரத்தைப் பார்த்து பாஜக அலறுவதற்கு சொல்லப்படும் காரணங்கள் அடடே ரகங்களாகத்தான் இருக்கின்றன. திமுக தலைவர் கருணாநிதி வைரவிழாவுக்கு மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், லாலு பிரசாத் யாதவ் என அகில இந்திய தலைவர்கள் அழைப்பதன் பின்னணியில் இருப்பதே சிதம்பரம்தானாம்.

மெகா கூட்டணி
இவர்கள் அனைவரையும் தமிழகத்துக்கு வரவழைப்பதன் மூலம் மோடிக்கு எதிராக மிகப் பெரும் அணியைக் கட்டமைக்க முடியும் என்பது சிதம்பரத்தின் நம்பிக்கை. மேலும் லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் போது காங்கிரஸ் கட்சிக்குக் கூடுதல் இடங்களைக் கேட்டுப் பெறவும் சிதம்பரம் திட்டமிட்டிருக்கிறார்.

பிரதமர் பதவி
பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளை ஒன்று திரட்டி மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும்போது பிரதமர் பதவி நிச்சயம் தம்மைத் தேடி வரும் என்பதும் சிதம்பரத்தின் கணக்காம். அதாவது ராகுல் காந்தியை முன்னிறுத்தி 2019 லோக்சபா தேர்தலை காங்கிரஸ் சந்தித்தால் தோல்வி நிச்சயம்.

இமேஜ் டேமேஜ்
ஆகையால் வேட்டி கட்டிய தமிழன் என்ற அடையாளத்தைத் தாண்டி ஊழல் கறைபடியாத அறிவுஜீவி என்ற பிம்பத்தின் மூலமாக தம்மை பிரதமர் வேட்பாளராக்கும் லாபிகளில் தீவிரம் காட்டினார் சிதம்பரம். இதை மோப்பம் பிடித்த உளவுத்துறை ப.சிதம்பரத்தின் இமேஜை டேமேஜ் செய்யும் வகையில்தான் சிபிஐ சோதனைகளை நடத்தியது என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications