மக்கள் விரும்பும் கூட்டணியாகத்தான் பாஜக இருக்கும்...அசூர நம்பிக்கையில் தமிழிசை !
சென்னை: உண்மையிலேயே மக்கள் விரும்பும் கூட்டணி என்றால் அது பாஜகதான் என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்
பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வேட்பாளர் தேர்வு குறித்து தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ், மாநில தலைவர் தமிழிசை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், சட்டசபைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விருப்ப மனு பெறப்பட்டது. தற்போது வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. வேட்பாளர் பட்டியல் நாளைக்குள் தயாராகிவிடும். அதனைத் தொடர்ந்து அகில இந்திய தலைமைக்கு வேட்பாளர் பட்டியல் அனுப்பி வைக்கப்படும்.
வெகுவிரைவில் வேட்பாளர் பட்டியலை எதிர்பார்க்கலாம். தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது. ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் அறிக்கையை எதிர்பார்க்கலாம். மக்கள் நலனை முன்னிறுத்தும் கட்சிகள்தான் எங்களோடு இணைகிறார்கள் என்றார்.
மேலும், திமுக - காங்கிரஸ் கூட்டணி மக்களால் ஏற்கெனவே நிராகரிக்கப்பட்ட கூட்டணி. அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு மிகுந்த அதிருப்தி இருக்கிறது. எல்லாவற்றிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மக்கள் நலக் கூட்டணி எந்த வித அரசியல் தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.
முதல்வர் வேட்பாளர் அறிவிப்பதிலேயே கட்சிகள் குறிக்கோளாக இருந்ததால் மக்கள் நலன் பின் தள்ளப்பட்டுவிட்டது. மக்கள் நலக் கூட்டணியில் மக்கள் நலன் புறந்தள்ளப்பட்டு விஜயகாந்த் பெயர்தான் முன்னிறுத்தப்படுகிறது. அதனால் உண்மையிலேயே மக்கள் நலன் காக்கும் கூட்டணி என்றால் அது பாஜகதான்
அதனால் தமிழக மக்கள் பாஜக தலைமையிலான கூட்டணியைத்தான் இப்போது நம்பிக்கையுடன் பார்க்கிறார்கள். நாங்கள் மக்களை நோக்கி அசுர பலத்துடன் களம் இறங்குகிறோம். பாஜகவுக்கு மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. நிச்சயமாக தமிழக தேர்தலில் பாஜக தாக்கத்தை ஏற்படுத்தும். நாங்கள் இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications