தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் பின்னடைவுக்கு வைகோவே காரணம் - எச்.ராஜா சுளீர் பேட்டி
மதுரை: கடந்த சட்டசபைத் தேர்தலில் தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் பின்னடைவுக்கு மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவே காரணமாகிவிட்டார் என பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா கூறினார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா, தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும். தமிழகத்தில் தடை விதிக்கப்பட்ட ஜல்லிக் கட்டு, ரேக்ளா ரேஸ் போன்றவற்றை மீண்டும் நடத்துவதற்கு புதிய சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வருகிற மழைக்கால கூட்ட தொடரில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த சட்டம் நிறை வேற்றப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லா சட்டம் கொண்டு வரப்படும்.
சென்னை பொறியாளர் சுவாதி படுகொலை நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பிரதான ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த மத்திய அரசு ரூ.40 கோடியை ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகளையும் தொடங்கிவிட்டது.
தமிழகத்தை பொறுத்த வரை சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. அதனால் குற்றவாளிகளை ஒடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை பெற்றுத்தர வேண்டும். கொலை செய்தால் ஜாமீனில் வெளியே வந்து விடலாம் என்ற நிலை மாற வேண்டும்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மிகவும் மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளன. அக்கட்சிகளின் பின்னடைவுக்கு மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான வைகோவே காரணம். அவரது செயல்பாடு அக்கட்சிகளின் தோல்விக்கு வழிவகுத்துவிட்டன. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications