ஈபிஎஸ் கோஷ்டிக்காக அம்மா படம்...ஓபிஎஸ் கோஷ்டிக்காக எம்ஜிஆர் விழா..பாஜகவின் சூப்பர் ஐஸ்!
அதிமுவின் இரு அணிகளும் குடுமிப்பிடி சண்டை போடுவதை வைத்து இரு அணியையும் சமமாக பார்ப்பதாக ஐஸ் வைத்து குளிர் காயும் வேலையில் இறங்கியுள்ளதோ பாஜக என்று எண்ணம் மேலோங்குகிறது.
சென்னை : அதிமுகவின் இரு கோஷ்டிகளும் அதிகாரப் போட்டி காரணமாக இரண்டு பட்டு கிடக்கும் நிலையில் இரு பக்கமும் ஐஸ் வைத்து அதன் பலனை பாஜக நன்றாக அனுபவித்து வருகிறதோ என்று சிந்திக்க வேண்டியுள்ளது.
அதிமுகவின் இரு அணிகளும் அதிகாரப் போட்டி காரணமாக அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்று இரண்டாக பிளவுபட்டு கிடக்கிறது. ஆனால் நாங்களெல்லாம் மாயாண்டிக் குடும்பத்தாரில் வரும் அண்ணன் தம்பி போன்றவர்கள் அதனால கட்சிக்கு ஆபத்துனா ஒன்னாகிடுவோம்னு புரூடா விட்டாங்க.
இரண்டு கோஷ்டியும் கடந்த மாதமே பேச்சுவார்த்தைக்கு தலா 7 பேர் கொண்ட குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று மாறி மாறி பேட்டி கொடுத்தனர். இந்நிலையில் நாங்க சொன்ன கோரிக்கையை நீங்க நிறைவேத்தல என்று சொல்லி அப்படியே ஜூட் விட்டவிட்டனர் ஓபிஎஸ் அணி. ஆனால் பிள்ளையார் தன் காலைப் பிடிக்க வந்த சனீஸ்வர பகவானிடம் இன்று போய் நாளை வா என்று சொன்ன மாதிரி நாங்க பேச்சுவார்த்தைக்கு தயாரா இருக்கோம் அவங்க தான் வரமாட்றாங்கன்னு ஓபிஎஸ் பக்கம் குற்றம் சொல்லிட்டே வராங்க அமைச்சர்கள்.

யார் நெருக்கம் என போட்டி
அடப் போங்கப்பா இரு தரப்பு இணைப்பு பேச்சைக் கேட்டு நமக்கே செம போராகிவிட்டது. இனியும் அவங்க ஒன்னு சேருவாங்களா என்ற சலிப்பு மக்களுக்கே வந்துவிட்டது. இந்நிலையில் யார் பாஜகவுடன் நெருக்கம் என்பதை நிரூபிப்பதற்கான போட்டியில் இப்போது அதிமுகவின் இரு கோஷ்டியும் இறங்கியுள்ளது. எந்தப் பதவியிலயும் இல்லாட்டியும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியைச் சேர்ந்த ஓ.பிஎஸ் தனது ஆதரவு சகாக்களுடன் சென்று மோடியை கடந்த வாரம் சந்தித்து விட்டு வந்தார்.

ஜெ. படத்திறப்பு விழா
இந்நிலையில் இன்று முதல்வர் பழனிச்சாமி டெல்லியில் பிரதமரை சந்தித்து சட்டப்பேரவையில் திறக்கப்பட உள்ள ஜெயலலிதா புகைப்படம் திறப்பு விழாவிற்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். ஜெ படத்திறப்பு விழாவிற்கு தேதி கேட்டும் பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

போட்டியா?
சென்னையில் அவசரமாக கூடிய ஓபிஎஸ் அணி ஓபிஎஸ் அணி அக்டோபர் மாதத்தில் தமிழகத்தில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் மோடி பங்கேற்பார் என தெரிவித்துள்ளது. அக்டோபரில் எப்போது நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்று பிரதமர் மோடி கோரியுள்ளதாகவும் விரைவில் தேதி முடிவு செய்யப்படும் என்றும் அந்த அணி அறிக்கை விடுத்துள்ளது.

ரெண்டு கோஷ்டிக்கும் ஐஸ்
குடியரசுத்தலைவர் தேர்தலுக்கு இரண்டு அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஆதரவும் பாஜகவிற்கு தேவைப்படுகிறது. இதனால் இரண்டு தரப்புக்கும் சாதகமாகவே செயல்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியின் இரண்டு நிகழ்ச்சியிலும் பங்கேற்க மோடி ஒப்புக்கொண்டுள்ளாரா என்று புகைச்சலை கிளப்புகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

அடப்பாவமே
ஊரு ரெண்டு பட்டால் யாருக்கோ கொண்டாட்டம் என்பார்கள், தமிழகத்தில் அதிமுக இரண்டாக பிளவுபட்டிருப்பதை சாதகமாக்கி, இரண்டு பக்கமும் ஐஸ் வைத்து தனது காரியத்தை சாதிக்கிறது பாஜக. ஆனால் இந்த அரசியல் சூழ்ச்சி கூடவா நம்ம முன்னாள், இந்நாள் சிஎம்ஸ்க்கு தெரியலை.












Click it and Unblock the Notifications