மக்கள் நலக் கூட்டணியும் ரெடி, பாஜகவும் ரெடி.... "கிங்" ஆக விஜயகாந்த் ரெடியா?
சென்னை: பாஜகவைப் பொறுத்தவரை விஜயகாந்த் விருப்பபடி அவரையே ராஜாவாக்க பாஜக தயாராகவே இருக்கிறது. நாங்கள் யாரையும் போட்டியாக கருதவில்ல என்று பாஜக கூறியுள்ளது.
இதன் மூலம் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த்தை அறிவிக்கவும் தாங்கள் தயார் என்பது போல அது சிக்னல் காட்டியுள்ளதாகவே கருதப்படுகிறது. மேலும் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக விஜயகாந்த்தை அறிவிக்கவும் பாஜக தயார் என்பதையும் இந்தக் கருத்து சுட்டிக் காட்டுகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், காஞ்சிபுரம் மாநாட்டின்போது நான் கிங்காக இருப்பதையே எனது தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்று கூறியிருந்தது குறித்து தமிழக பாஜக பொறுப்பாளரான முரளிதர ராவ் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

ராவ் - பிரேமலதா பேச்சு
தேமுதிக, பாஜக இடையிலான பேச்சுக்களை பிரேமலதாவும், முரளிதர ராவும் சேர்ந்துதான் நடத்தி வருவதாக ஒரு "டாக்" உண்டு. இருவரும் இதுதொடர்பாக பலமுறை பேச்சு நடத்தியுள்ளதாகவும் தெரிகிறது.

தேமுதிக வைத்த 3 டிமாண்ட்!
இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது சீட்டை விட முக்கியமா 3 டிமாண்டுகளை தேமுதிக வைத்துள்ளதாகவும் பேச்சு உள்ளது. அதில் ஒன்று பிரேமலதாவுக்கு தேசிய மகளிர் ஆணையத் தலைவர் பதவி, இன்னொன்று ஒரு ராஜ்யசபா எம்.பி பதவி (மச்சான் சுதீஷுக்கு) என்று சொல்கிறார்கள். 3வது டிமாண்ட் குறித்து வெளியில் சொல்ல முடியாது என்றும் கூறப்படுகிறது.

எல்லாவற்றுக்கும் ஓகே
பாஜகவைப் பொறுத்தவரை தமிழகத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் லோக்சபா தேர்தலின்போது அறுவடை செய்ய நல்ல களம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் இருப்பதால் தேமுதிகவின் கோரிக்கைகளை அது நிராகரிக்கும் நிலையில் இல்லை.
கிங்காகவும் இருக்கலாம்
இந்த நிலையில்தான் முரளிதர ராவ் விஜயகாந்த் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தேர்தல் கூட்டணிக்காக பல கட்சிகளும் விஜயகாந்தை அணுகி உள்ளது. நாங்களும் அணுகி உள்ளோம்.

அவர் சொல்லலையே!
எந்த கட்சிகளுடன் கூட்டணி என்று விஜயகாந்த் அறிவிக்கவில்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் அவர் கூறவில்லை. எனவே பாஜக கூட்டணிக்கு தேமுதிக வரும் வாய்ப்பு உள்ளது.

போட்டி இல்லை
தமிழக பா.ஜ.க.வில் முதல்வர் வேட்பாளர் என்று யாரையும் முன்நிறுத்தவில்லை. எனவே விஜயகாந்த் கிங்காக இருக்க வேண்டும் என்று கூறியிருப்பதால், பாஜக கூட்டணிக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே யாரையும் போட்டியாகவே நினைத்ததில்லை. எனவே எங்களுக்குப் பிரச்சினை இல்லை என்றார்.

மக்கள் நலக் கூட்டணியும் ரெடிதான்
ஏற்கனவே மக்கள் நலக் கூட்டணியைச் சேர்ந்த திருமாவளவனும் கூட, விஜயகாந்த்தை கிங் ஆக்குவது குறித்துப் பரிசீலிக்க தாங்களும் தயார்தான் என்று கூறியுள்ளது நினைவிருக்கலாம்.

முதலில் கூட்டணிக்கு வாங்க
இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், தேமுதிக மாநாட்டில் திமுக, அதிமுகவை பிரேமலதா விமர்சித்துள்ளார். இதன்மூலம், அந்த மாநாட்டில் ஒரு விஷயத்தை தேமுதிகவினர் தெளிவுபடுத்தியுள்ளனர். விஜயகாந்தை ‘கிங்' ஆக்க வேண்டும் அதாவது, அவரை முதல்வராக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணமாக உள்ளது.

நாங்க தயார்தான்
திமுகவும், அதிமுகவும் அவரை முதல்வராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மீதமிருப்பது இரண்டே வழிதான். ஒன்று பாஜக, மற்றொன்று மக்கள் நலக் கூட்டணி. அதிமுகவுடன் பாஜக காட்டும் நெருக்கம், விஜயகாந்துக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்ற சூழல்தான் இப்போது உள்ளது. எனவே, மக்கள் நலக் கூட்டணிக்கு அவர் வந்தால், அவரை முதல்வர் வேட்பாளர் ஆக்குவது பற்றி நாங்கள் 4 கட்சித் தலைவர்களும் பேசி முடிவெடுப்போம் என்று கூறியுள்ளார் திருமாவளவன்.

ரெண்டு பேரு ரெடி.. விஜயகாந்த் ரெடியா!
இப்போது மக்கள் நலக் கூட்டணியும் ரெடி, பாஜகவும் ரெடி.... "கிங்" ஆக விஜயகாந்த் ரெடியா?












Click it and Unblock the Notifications