இரட்டை இலையை முடக்கியதன் பின்னணியில் யார், யார்? அன்வர் ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு
டெல்லியில் சதித்திட்டம் தீட்டப்பட்டு, பன்னீர்செல்வம் மூலமாக கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி சின்னத்தை முடக்கிவிட்டார்கள் என்று, அன்வர் ராஜா தெரிவித்தார்.
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் துணையுடன் பாஜக தமிழகத்தில் நுழையப் பார்ப்பதாக அதிமுக எம்.பி. அன்வர் ராஜா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு அன்வர் ராஜா பேட்டி கொடுத்தார். அப்போது, அன்வர் ராஜா கூறியதாவது:
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. பாஜகவின் பின்னணியில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. அதேநேரம், இரட்டை இலை சின்னம் முடக்கம் என்பது தாற்காலிகமானதுதான். மீண்டும் இரட்டை இலை சின்னத்தை அதிமுக பெற்றே தீரும்.
எம்.ஜி.ஆர் சின்னம்
அதிமுக பெயர் மற்றும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் அதிமுக கட்சி மிகப்பெரிய பின்னடவை சந்தித்துள்ளது. இப்போது நாங்கள் தொப்பி சின்னத்தில் போட்டியிடுகிறோம். தொப்பி என்பது எம்.ஜி.ஆர் அணிந்தது. எனவே இது அவருடைய சின்னம். எம்ஜிஆர் கட்சியான அதிமுகவும் தொப்பி சின்னத்தில் மகத்தான வெற்றி பெறும்.
பன்னீர்செல்வம் நோக்கம்
பன்னீர்செல்வத்தை பொருத்தவரையில் இரட்டை இலை சின்னத்தை அவர் கேட்பது என்பது அவருடைய நோக்கமில்லை. முடக்குவதுதான் அவருடைய எண்ணம். இரட்டை இலை முடக்கப்பட்டதும், அதற்காக வருத்தப்படுவதை போல அறிக்கை வெளியிட்டுள்ளார். போயஸ் தோட்டத்தில் யாருமே இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்.
முதல்வராக்கியது பாஜக
பன்னீர்செல்வத்தை பயன்படுத்தி, பாஜக தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கிறது. அதிமுகவுடனான நூறாண்டு பகையைத் தீர்த்துக் கொள்ள பாஜக முயற்சிக்கிறது. முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்தவுடன் மத்திய அமைச்சர் வெங்கய்யநாயுடு ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார். அவருடைய துணையுடன் பாஜக தமிழகத்தில் நுழையப் பார்க்கிறது. அதை அதிமுக-அம்மா அணி தடுத்து நிறுத்தும்.
மக்கள் மன்னிக்க மாட்டார்கள்
கட்சியின் கொடியை கூட பயன்படுத்த முடியாத சூழ்நிலைக்கு நம்மை ஆளாக்கியவர்களை ஆர்.கே.நகர் மக்கள் மன்னிக்கமாட்டார்கள். சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் நிச்சயம் அங்கீகரிக்கும். டெல்லியில் சதித்திட்டம் தீட்டப்பட்டு, பன்னீர்செல்வம் மூலமாக கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி சின்னத்தை முடக்கிவிட்டார்கள். இவ்வாறு அன்வர் ராஜா தெரிவித்தார்.