பாஜகவின் சபதம்: கூட்டணியில் இருந்து வெளியேறும் நெருக்கடியில் விஜயகாந்த்
தமிழக அரசியல்ல எப்ப வேணா எது வேணா நடக்கலாம்.. பெரிய நாட்டாமைங்க அதிமுக, திமுக கூட சேர விரும்பாதவங்க தனியா கூட்டணி சேர்ந்து கும்மியடிக்கலாம்னு பார்க்கறாங்க. ஆனா அங்கே நாட்டாமை யாருங்கிறதுதான் பஞ்சாயத்தே.
லோக்சபா தேர்தல்ல தேசிய ஜனநாயக கூட்டணிங்கிற பேர்ல ஒன்னா இருந்த கட்சிக எல்லாம் நவகிரகம் மாதிரி ஆளுக்கு ஒரு திசையா கிடக்கிறாங்க. மதிமுக ஆரம்பத்திலேயே கழண்டுருச்சு. பாமக ராமதாஸோ மகனை முதல்வர் வேட்பாளரா அறிவிச்சிருக்கு. தேமுதிகவின் விஜயகாந்தும் முதல்வர் வேட்பாளர்தான். விடுதலை சிறுத்தைகளோ கூட சில கட்சிகளை சேர்த்துக்கொண்டு தேர்தல் கூட்டணியில மட்டுமல்ல ஆட்சியிலயும் கூட்டணி வேணும் அப்படின்னு கோஷம் போட ஆரம்பிச்சுட்டாங்க.
அப்போ பாரதிய ஜனதா கட்சி? அதிமுகவும், பாஜகவும் உள்ளுக்குள்ள பேசிக்கிறாங்கப்பா. வர்ற தேர்தல்ல 90 சீட்டு பேசியாச்சு... 70 சீட்டு கன்பார்ம் இப்படி எல்லாம் கிசுகிசுக்கிறப்ப விஜயகாந்த் எப்படி பாஜக கூட இணக்கமா போவாரு? அதனாலதான் எதுலயும் பிடி கொடுக்காம அமைதியா யோகா செய்ய ஆரம்பிச்சிட்டாரு விஜயகாந்த்.
பாஜக - அதிமுக கூட்டணி வரப்போகுதுன்னு பேசறதுல நினைக்கிறதுல தப்பு இருக்கிற மாதிரி தெரியலை. ஏன்னா டெல்லியில இருக்கிற பாஜக தலைவர்கள் எல்லாம் அதிமுக தலைமையோட இணக்கமாதானே இருக்காங்க. ஆனா இந்த கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற மாதிரி, ‘நாம யாரு கூடவும் கூட்டணி சேரக்கூடாது. சீட்டுக்காக கையேந்த கூடாது. நம்ம தலைமையை ஏத்துக்கிறவங்க கூடதான் கூட்டணி' அப்படின்னு தமிழக பாஜக தலைவர்கள் உறுதியா பேச ஆரம்பிச்சிருக்காங்க.

கும்பகோணத்தில் சபதம்
கும்பகோணத்துல போனவாரம் நடந்த செயற்குழு கூட்டத்துல பேசிய தலைவர்கள் எல்லாரும் இதைத்தான் சொல்லியிருக்காங்க. கூட்டத்தில பேசிய மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், தமிழ்நாட்ல நமக்கு 40 லட்சம் உறுப்பினர்கள் இருக்காங்க. அப்போ 2016ல நாமதான் ஆளுங்கட்சி என்று சபதம் எடுத்துக்கொண்டு ஒற்றுமையாக செயல்படுங்கள் என்று சிரிக்காமல் சொன்னார், ஆனால் கூட்டத்தில் அமர்ந்திருந்த சிலர்தான் சத்தம் போடாமல் கமுக்கமாக சிரித்துக்கொண்டார்களாம். தேர்தலுக்கு 8 மாதம் மட்டுமே இருக்கிறப்ப எப்படி ஆளுங்கட்சியாக முடியும்னு அவர்களுக்குத் தெரியாதா?.

காவிக்கொடி பறக்கணும்
கூட்டத்தில் அதிமுக, திமுகவை வறுத்தெடுத்த தமிழிசை, இனி நம்மள பகைக்சிக்கிட்டு தமிழ்நாட்ல யாரும் ஆட்சி செய்ய முடியாது என்று பொடி வைத்தார். அதிமுகவை எதிர்க்கும் துணிச்சல் பாஜகவிற்கு மட்டுமே உள்ளது என்று சொன்ன அவர், திராவிட கட்சிகளை தூக்கி எறிந்துவிட்டு புனித ஜார்ஜ் கோட்டையில் காவிக்கொடியை பறக்கவிட வேண்டும் என்றும் சொன்னார்.

ஊழலை எதிர்க்க
தமிழிசை பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் என்ன நினைத்தாரோ அனல் சூழ்ந்த இடத்தை சற்றே குளுமையாக்க, "கும்பகோணம்னா தெலுங்கு மொழியில ஊழல்னு சொல்லுவாங்க" ஆனா ஊழலை ஒழிக்க கோயில்கள் இருக்கிற ஊரில் நாம கூடியிருக்கோம்.

வலுவான அடித்தளம்
குடும்பத்தில பிரச்சினைன்னா இங்கே இருக்கிற கோயில்களுக்கு வந்து கும்பிட்டுட்டு போவாங்க. நாம இங்கே நம்ம கட்சியில இருக்கிற பிரச்சினையை தீர்க்க இங்கே கூடியிருக்கோம். நாம வலுவா இருக்கணும் அப்பதான் நம்ம தலைமையை ஏற்பாங்க. மத்தியில இருக்கிற மாதிரி தமிழ்நாட்லயும் நம்ம ஆட்சி இருக்கணும் அதுக்கு வலுவான அடித்தளம் அமைக்கணும்னு சொல்லி முடித்தார்.

தள்ளுவண்டி தேவையா?
முதல்நாள் கூட்டத்தில் பறந்த அனல் மறுநாளும் தொடர்ந்தது. ஆரம்பமே அமர்களம் என்பதைப் போல, மூத்த தலைவர் இல.கணேசன் பேச்சை தொடங்கினார். கூட்டணின்னா அது பா.ஜ.க தலைமையில்தான் அமையணும். நாம்தான் பிற கட்சிகளுக்கு சீட்டு பிரிச்சித் தரணுமே தவிர, வேற எந்தக் கட்சிகளிடமும் நாம சீட்டு கேட்டு வாங்குற மாதிரி கூட்டணி அமையக்கூடாதுன்னு என்றார். பாஜக குழந்தையாக தத்தி தத்தி நடந்தபோது கூட்டணி என்ற நடைவண்டி தேவைப்பட்டது. இப்போது வளர்ந்து இளைஞரான பின்னரும் தள்ளுவண்டி தேவையா என்று பஞ்ச் வைத்தார் இல.கணேசன்.

நாம ஆட்சிக்கு வரணும்
அது பேசிய சி.பி.ராதாகிருஷ்ணனும், இதே தொனியில் தொடர்ந்தார். நம்ம கூட கூட்டணியில திமுக வருகிறதா? அதிமுக வருகிறதா என்பது முக்கியமல்ல. விஜயகாந்த் நம்முடன் இருப்பது கூட இரண்டாம்பட்சம்தான். ஆனால் தமிழ்நாட்டில் நாம ஆட்சிக்கு வரணும் அதுக்கு என்ன வழி அதைத்தான் பார்க்கவேண்டும் என்றார் சி.பி.ஆர்.

தப்பு தாளங்கள்
எல்லோரும் ஒரே மாதிரி பேசுனா எப்படி, ஹெச்.ராஜா கொஞ்சம் மாத்தி பேசினார். தேர்தல்ல கூட்டணி இல்லைன்னா நமக்குத்தான் இழப்பு. இன்னும் 8 மாசத்துல நாம கட்சியை பலப்படுத்தி ஆட்சியை எப்படி பிடிக்க முடியும்னு கேட்டார். எப்படியும் கூட்டணி வைக்கத்தான் போறோம். அதை யாரோட வச்சா என்ன? இது என்ன கொள்கை கூட்டணியா? தேர்தல் கூட்டணிதானே, அதை வெளிப்படையா சொல்லிலாமேன்னு சொல்லி முடிச்சார்.

யாருடைய ஆதரவும் தேவையில்லை
கடைசியாக பேசிய பொன்.ராதாகிருஷ்ணனோ, மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு போகணும், 40 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட நமக்கு இது சாதாரண காரியமல்ல. அதிமுக, திமுகவின் ஆதரவு நமக்கு இனி தேவையில்லை. யாருடைய தயவும் இல்லாமல் நம்முடைய சக்தியை காட்டணும்னு சொல்லி முத்தாய்ப்பாய் முடித்தார்.

நெருக்கடியில் விஜயகாந்த்
தமிழகத்தில் தனது தலைமையில்தான் கூட்டணி அமைய வேண்டும் என்றும் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் விஜயகாந்த் தொடர்ந்து சொல்லி வந்தார். ஆனால் தனிக்கட்சி எதுக்கு பாஜகவில் ஐக்கியமாகிடுங்களேன், உங்களை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கிறோம்' என்று சொன்னார்களாம் ஆனால் அதனை விஜயகாந்த் மறுத்துவிட்டாராம் இதுதான் சிக்கலின் மூலகாரணமாம்.

புதிய கூட்டணி
செயற்குழு கூட்டத்தில் பேசிய சி.பி.ஆர் சந்திரபாபு நாயுடு உடன் தன்னை ஒப்பிட்டு பேசியது விஜயகாந்த்தின் கோபத்தை அதிகப்படுத்தியிருக்கிறதாம். இது குறித்து பா.ஜ.க தலைவர்கள் சிலரிடம் தன் அதிருப்தியை தெரிவித்தாராம். சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியை தவிர்த்து, புதிதாக யாருடன் கூட்டணி அமைப்பது என்று, தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறாராம் விஜயகாந்த்.

மோடியை சந்திக்க முடிவு
சமீபத்தில் சீரடி சென்ற விஜயகாந்த், மும்பையில், பா.ஜ.க தலைவர் ஒருவரை சந்தித்துப் பேசினாராம். அப்போது, அவர், கட்சித் தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடியை சந்தித்து விட்டு முடிவெடுங்கள் சொன்னாராம். இந்த டீலிங் நன்றாக இருக்கவே மோடி, அமித்ஷாவை சந்திக்க அப்பாயின்மெண்ட் கேட்டிருக்கிறாராம்.

நிறைவேறுமா கும்பகோணம் சபதம்
எது எப்படியோ புனித ஜார்ஜ் கோட்டையை ஆளும் அதிமுக தலைவி செங்கோட்டையை பிடிக்க சபதம் ஏற்றதைப் போல செங்கோட்டையை ஆளும் பாஜக, தமிழகத்தில் புனித ஜார்ஜ் கோட்டையின் மீது கண் வைத்துள்ளது. கும்பகோணம் சபதம் நிறைவேறுமா? பொருத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications