தமிழக அரசியல் பின்னணியில் பாஜக.. ராகுல்காந்தியை சந்தித்த பிறகு குஷ்பு குற்றச்சாட்டு
டெல்லி: தமிழக அரசியலின் பின்னணியில் பாஜக உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் குஷ்பு தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு இன்று டெல்லியில் அக்கட்சி தேசிய துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். இதன்பிறகு, குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:
சில விஷயங்களை ராகுல் காந்தியிடம் பகிர்ந்துகொள்ள வேண்டியிருந்தது என்பதால்தான், அவரை சந்தித்து பேசினேன். டெல்லியில் விவசாயிகளை சந்திக்கலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பை தொடர்ந்து விவசாயிகள் ஊருக்கு சென்றுவிட்டனர். விவசாயிகளை அவர்களை முதல்வர் 40 நாட்களுக்கு பிறகுதான் சந்தித்து இருக்கிறார்.
விவசாயிகளுக்காக தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அதிமுகவின் இரு அணிகளும் இணையும் முயற்சிக்கு இரட்டை இலை சின்னம்தான் காரணம். அவர்கள் தனித்தனியாக தேர்தலில் நின்றால் யாருக்கும் ஓட்டு கிடைக்காது. இப்போது 3வதாக டி.டி.வி.தினகரனும் வந்து சேர்ந்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெறும் ஒவ்வொரு விஷயத்தின் பின்னணியிலும் பாஜக இருக்கிறது. தமிழக அரசியலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி சேர்ந்தால் ஆச்சரியப்பட வேண்டியது இல்லை. என்ன செய்தாலும், தமிழகத்தில் பாஜக நுழைய முடியாது. அவர்களின் கனவு பலிக்காது. இவ்வாறு கூறினார்.