பாஜக- பாமக கூட்டணி நாளை இறுதியாகும்: பொன். ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
பாஜக கூட்டணியை பொறுத்தவரை பா.ம.க.வுடன் சுமூகமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அனேகமாக நாளைக்குள் பேச்சுவார்த்தை நிறைவடையும்.
தே.மு.தி.க.வை பொறுத்தவரை அக்கட்சித் தலைவர் விஜயகாந்த்தான் இனி பாஜகவுடனான கூட்டணி பற்றி அறிவிக்க வேண்டும்.
அனைத்து கட்சிகளுமே அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பது இயற்கையானதுதான். அதுபோல பிரதமர் வேட்பாளராக நிற்க வேண்டும் என்ற ஆசையும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் இருக்கத்தான் செய்யும்.
இலங்கை கடற்படை தொடர்ந்தும் தமிழக மீனவர்களை கைது செய்வதும் துன்புறுத்தி வருவதும் மிகுந்த கண்டனத்துக்குரியது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நரேந்திரமோடி பிரதமராக வந்தால் மட்டுமே மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். 8-ந்தேதி வண்டலூரில் நடைபெறும் நரேந்திர மோடி பொதுக் கூட்டத்தில் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.