தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் சூழ்நிலை உள்ளது: தமிழிசை
பெரம்பலூர்: மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதால், தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
செயற்குழு கூட்டத்திற்காக பெரம்பலூர் வந்திருந்த தமிழிசை, செய்தியாளர்களைச் சந்தித்தார். இப்பேட்டியின்போது மாநில துணை தலைவர் சுப்ரமணியன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்ரமணியம், மாவட்ட தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியில் புதிதாக 10 கோடி பேரை உறுப்பினராக சேர்க்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் தீவிரமாக உறுப்பினர் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 40 லட்சம் பேர் மிஸ்டுகால் மூலம் உறுப்பினராக இணைந்துள்ளனர்.
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளனர். தமிழகத்தில் மக்கள் தொடர்பில்லா ஆட்சி நடைபெற்று வருகிறது. மீனவர் பிரச்சனையில் ஒரு நிரந்தர தீர்வு ஏற்படவேண்டும் என பாரதிய ஜனதா விரும்புகிறது. இதற்காக வரும் 27-ந்தேதி தமிழக மீனவர் பிரதிநிதிகள் மற்றும் சங்க பிரதிநிதிகளை அழைத்து டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதன் அறிக்கையை வருகிற 29-ந்தேதி மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் அளிக்கவுள்ளோம்.
ஆந்திராவில் 20 தமிழர்களை சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்தது. அதோடு மட்டுமல்லாமல் அக்குடும்பத்தினை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அக்குடும்பத்தை சேர்ந்த பெண் குழந்தைகளை செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இணைத்துள்ளோம்.
பிரதமர் மோடி பற்றி அவதூறாக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் பேசியுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நிலம் கையகப்படுத்தும் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நாடகம் ஆடுகின்றன.
ஏழை, எளிய மக்கள் தொழில் துவங்கி பொருளாதார வளர்ச்சியடைய முத்ரா வங்கி திட்டம் துவங்கப்பட்டு அதற்காக 30ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெண் குழந்தை பாதுகாப்பிற்காக செல்வ மகள் சேமிப்பு திட்டம் துவங்கப்பட்டுள்ளது. மேகதாது அணை கட்ட தமிழக பாரதிய ஜனதா துணை போகாது, இத்திட்டத்திற்காக மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. இதனால் கண்டிப்பாக மேகதாது அணை அமைய வாய்ப்பே இல்லை.
தமிழக மக்கள் நலனில் அக்கரையில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் 42 மத்திய அமைச்சர்களை தமிழகத்திற்கு அனுப்பி அனைத்து மாவட்டத்திலும் மக்களின் பிரச்சனைகளை நேரில் கேட்டு நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் மத்திய அமைச்சர்கள் நேரில் வரவுள்ளனர். மக்களோடு மத்திய அரசு திட்டம் என்ற திட்டதை செயல்படுத்தப்படவுள்ளது. ஒரு வழக்கை நோக்கியே தமிழக அரசு செயல்படுகிறது. இது துரதிஷ்டமானது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முன்கூட்டியே வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எந்த நேரத்திலும் தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க பாரதிய ஜனதா கட்சி தயாராகவுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர விரும்பும் கட்சிகளை இணைத்து பாரதிய ஜனதா கட்சி தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications