சென்னை மாநகராட்சியைக் கண்டித்து நாளை பாஜக முற்றுகைப் போராட்டம்... தமிழிசை அறிவிப்பு
சென்னை: சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவிவருவதை தடுக்கத் தவறிய மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து நாளை பாஜக சார்பில் ரிப்பன் கட்டிடத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் சென்னை மக்கள் பரிதவித்துக் கொண்டுள்ளனர். சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. சென்னையில் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல நோய்கள் பரவிவருகின்றன. இதனைத் தடுக்கத் தவறிய மாநகராட்சி நிர்வாகம் செயலிழந்துவிட்டது. டெங்கு நோய் பற்றிய தரவுகள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எனவே, இதுபற்றி மாநகராட்சி வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கத் தவறிய மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து நாளை ( நவம்பர் 4) காலை 11 மணிக்கு ரிப்பன் கட்டிடம் முன்பு பா.ஜ.க. சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
இதே கருத்தை வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் நேற்று போராட்டம் நடத்தியிருக்கிறார். மேலும் பாடகர் கோவனை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இவர்கள் கட்சியை சேர்ந்த தலைவரை யாராவது கேவலமாக சித்தரித்து பாடியிருந்தால் இப்படித்தான் விடுதலை செய்யும்படி கூறுவாரா?
தமிழகத்தில் திமுக, அதிமுக.,வுக்கு மாற்று பா.ஜ.க. மட்டும் தான். தேர்தலுக்கான கூட்டணியாக மாறியிருக்கும் மக்கள் நல கூட்டியக்கத்தால் தமிழகத்தின் தலை எழுத்தை மாற்றி விட முடியாது. முதலில் இந்த கூட்டணி தேர்தல் வரை தொடருமா? என்பதே சந்தேகம் தான்.
பா.ஜ.க.வை எங்கள் கூட்டணியில் சேர்க்க மாட்டோம் என்று வைகோ கூறியிருக்கிறார். நாங்களே அவர்களை விரும்பவில்லை. பிரதமர் நரேந்திரமோடியின் நல்ல திட்டங்கள் தமிழகத்தை வந்தடைய தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
தமிழகத்தில் ‘நமக்கு நாமே' என்ற பெயரில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வரும் பயணத்தை மக்கள் நம்ப தயாராக இல்லை என்று அவர் கூறினார்.
முன்னதாக, விழுப்புரம் மாவட்டம் மைலம் தொகுதியை சேர்ந்த பா.ம.க. முன்னாள் மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி, தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார்.












Click it and Unblock the Notifications