குஷ்புவை வளைக்கிறது பாஜக.. தொடங்கியது விறுவிறு பேச்சுவார்த்தை!
பொதுசிவில் சட்டத்துக்காக குரல் கொடுக்கும் காங்கிரஸ் கட்சியின் குஷ்புவை வளைத்துப் போடும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.
சென்னை: காங்கிரஸ் மேலிடத்தின் கடும் அதிருப்திக்குள்ளாகியிருக்கும் நடிகை குஷ்புவை வளைத்துப்போடுவதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தைகளை பாஜக தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
பொதுசிவில் சட்டத்தை ஆதரித்து குஷ்பு அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை கிளப்பியது. உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இஸ்லாமியர்கள் கடும் அதிருப்தியை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் வெளிப்படுத்தியிருந்தனர்.

இப்படி காங்கிரஸ் கட்சியை நெருக்கடிக்குள்ளாக்கிய குஷ்புவிடம் மேலிடம் விளக்கம் கேட்டது. ஆனாலும் குஷ்பு அளித்த விளக்கத்தில் டெல்லி மேலிடம் திருப்தி அடையவில்லை. இதனால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே குஷ்புவுக்கு பாரதிய ஜனதா தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனோ, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசருக்கு குஷ்புதான் பாடம் எடுக்க வேண்டும் என கிண்டலடித்திருந்தார்.
அத்துடன் காங்கிரஸில் இருந்து குஷ்புவை இழுத்து பாஜகவில் சேர்க்க வைக்கும் பேச்சுவார்த்தைகளையும் தொடங்கிவிட்டதாம் பாஜக. இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த குஷ்பு தங்களது குரலில் பேசிவருவதால் மகிழ்ந்து போயுள்ளது; அதனால் பாஜகவின் இஸ்லாமியர் முகமாக குஷ்புவை முன்னிலைப்படுத்தும் வகையில் இப்பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications