ரஜினியை மிரட்டியதா பாஜக..? என்ன சொல்கிறார் கராத்தே தியாகராஜன்?
பாஜகவினர் ரஜினியை தனிக்கட்சி தொடங்கக்கூடாது என மிரட்டியதாக கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: பாஜகவினர் ரஜினியை தனிக்கட்சி தொடங்கக்கூடாது என மிரட்டியதாக கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். ப.சிதம்பரத்தின் பெயரை கெடுக்கவே அவரது வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் வீட்டிலும் சி.பி.ஐ. சோதனை நடைபெறுகிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீடு உள்ளிட்ட 8 இடங்களில் காலை 7 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது. 9 பேர் கொண்ட குழு 8 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.

சிதம்பரம் வீட்டில் ரெய்டு
சிவகங்கையில் உள்ள சிதம்பரத்தின் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. வெளிநாடுகளில் முதலீடு, வரிஏய்ப்பு உள்ளிட்ட புகாரை அடுத்து சோதனை நடைபெற்று வருகிறது.

படையெடுத்த நிர்வாகிகள்
ப.சிதம்பரத்தின் வீட்டில் நடத்தப்பட்ட இந்த திடீர் ரெய்டால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் தீயாக பரவியதால் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கேஆர் ராமசாமி, கராத்தே தியாக ராஜன் உள்ளிட்டோர் சிதம்பரத்தின் வீட்டுக்கு படையெடுத்தனர்.

பெயரைக் கெடுக்க
அப்போது பேசிய கராத்தே தியாகராஜன் சிதம்பரத்தின் பெயரைக் கெடுக்கவே இந்த சோதனை நடத்தப்படுவதாக குற்றம் சாட்டினார். தமிழக முதல்வர் வேட்பாளராக ப.சிதம்பரம் அறிவிக்கப்படலாம் என்பதால் பாஜக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

ரஜினியை மிரட்டிய பாஜக
மேலும் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கக்கூடாது என பாஜக மிரட்டியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தங்களுடன்தான் சேர வேண்டும் என பாஜகவினர் மறைமுக மிரட்டல் விடுப்பதாகவும் கராத்தே தியாகராஜன் சாடினார்.

அரசியலில் பரபரப்பு
ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்தை பாஜகவினர் மிரட்டியதாக கராத்தே தியாகராஜன் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications