சர்ச்சை பேச்சு: ஹெச்.ராஜாவிற்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்
தஞ்சாவூர்: சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் நல கூட்டணி கட்சியினர் கருப்புகொடி காட்டி ஒரத்தநாட்டில் போராட்டம் நடத்தினர்.
பாரதிய ஜனதா கட்சியின் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியின் ஊழியர் கூட்டம் ரத்னா மகாலில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஒரத்தநாடு வந்தார்.

அப்போது, சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் ஹெச்.ராஜாவை ஒரத்தநாட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி மக்கள் நல கூட்டணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், ஒரத்தநாட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஹெச்.ராஜா வரக்கூடாது என்பதை வலியுறுத்தி ஒரத்தநாடு பஸ் நிலையம் அருகே மக்கள் நல கூட்டணி கட்சியினர் 50க்கும் மேற்பட்டவர்கள் கருப்பு கொடிஏந்தி போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகணன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து போலீசார் பாதுகாப்பு அளித்ததை தொடர்ந்து ஹெச்.ராஜா கூட்டத்தில் கலந்து கொண்டார். மக்கள் நல கூட்டணி கட்சியினரின் இந்த திடீர் போராட்டத்தால் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications