குளு குளு குற்றாலத்தில் தொடங்கியது படகு சவாரி.. ரூ. 75 முதல் ரூ. 155 வரை கட்டணம்
குற்றாலம்: இந்தியாவின் ஸ்பா என அழைக்கப்படும் குற்றாலத்தில் இன்று படகு சவாரி தொடங்கியது. மாவட்ட ஆட்சித் தலைவர் கருணாகரன் படகு சவாரியைத் தொடங்கி வைத்தார்.
குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவ மழையின் காரணமாக சீசன் களை கட்டியுள்ளதால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த இரு தினங்களாக சாரல் இல்லை என்றாலும் அருவிகளுக்கு வரும் தண்ணீர் அளவு குறையவில்லை. மேலும் குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகள் பொழுது போக்கும் வண்ணம் இங்கு ஐந்தருவி சுற்றுச் சூழல் பூங்காவைத் தவிர வேறெந்த வசதிகளும் இல்லாததால் கடந்த சில நாட்களாக தங்களது சுற்றுலாவை அருவிகளிலேயே கழித்து வந்தனர்.
வெண்ணமடை குளம்
இந்த நிலையில் ஐந்தருவி செல்லும் வழியில் உள்ள வெண்ணமடை குளத்தில் படகு குழாமுக்கு போதிய தண்ணீர் இல்லாததால் படகு போக்குவரத்து தொடங்கப்படாமல் இருந்து வந்தது. தற்போது குழாமுக்கு ஐந்தருவியில் இருந்து தண்ணீரை திருப்பி விட்டுள்ளனர்.
இன்று முதல் படகு சவாரி
இதனால் குளம் நிரம்பியுள்ளது. இதையடுத்து இன்று காலை முதல் இங்கு படகு போக்குவரத்தை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் முருகையாப் பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் பி.ஜி.ராஜேந்திரன், நகரமன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் எராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
காத்திருக்கும் 31 படகுகள்
தற்போது இங்கு 31 படகுகள் தயார் நிலையில் உள்ளன. இதில் இரண்டு இருக்கை பெடல் படகுகள், நான்கு இருக்கை பெடல் படகுகள், நான்கு இருக்கை துடுப்பு படகுகள், தனிநபர் துடுப்பு படகுகள் ஆகியவை உள்ளது.
கட்டணம்
அரைமணி நேரத்திற்கு கட்டணம் விபரம்: தனிநபர் படகு -75ரூபாய், இரண்டு இருக்கை பெடல் படகு ரூ-100, நான்கு இருக்கை பெடல் படகு ரூபாய்.125, நான்கு இருக்கை துடுப்பு படகு 155 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் வசதிக்காக
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கருணாகரன் கூறும் போது, சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இந்த படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
உடனே கிளம்புங்க குற்றாலத்துக்கு!