குற்றாலம் போறீங்களா.. நாளை முதல் படகு சவாரியை என்ஜாய் பண்ணலாம்!
குற்றாலம்: குற்றாலத்தில் நாளை முதல் படகு சவாரி தொடங்குகிறது.
இந்தியாவில் அருவிகளின் நகரமாக விளங்குவது குற்றாலம். இங்கு கொட்டும் அருவி நீரானது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நிறைந்து காணப்படும் சுமார் 2600 வகை மூலிகைகள் மீது பட்டு தவழ்ந்து வந்து பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட பகுதிகளில் கொட்டுவதால் இந்த அருவி நீரில் குளித்தால் சரும நோய்கள் குணமடையும் என்பார்கள்.
பிற வகை நோய்களும் கூட நம்மை அண்டாது என்பார்கள். இப்படி பல்வேறு சிறப்புக்கள் நிறைந்த குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் சீசன் களை கட்டும்.
இந்த சமயத்தில் இங்கு சுமார் 30 முதல் 50 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள். இவர்களது அடிப்படைத் தேவைகள், பொழுதுபோக்கு அம்சங்கள், தங்கும் விடுதிகள் போன்றவை போதிய அளவில் இல்லாததால் தமிழக அரசின் உத்தரவுப்படி இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் பழைய குற்றாலம், ஐந்தருவி, மெயின் அருவி, புலியருவி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டார்.
இங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளிடம் குறைகள், நிறைகள் பற்றி கேட்டறிந்தார். கழிப்பிடங்களையும், குடிநீர் வசதி போன்றவற்றையும் பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வளர்ச்சிப் பணிகள் அரசின் உத்தரவுப்படி செய்யப்பட்டுள்ளது.
இன்னும் அதிகமாக திடக்கழிவு மேலாண்மைக்கு 33.8. லட்சம், சுற்றுலா விடுதிகள் மேம்பாட்டுக்கு ரூ. 5.29.கோடி செலவிலும், அருவிப் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் ரூ 5.51 கோடி செலவிலும், பூங்கா பகுதியில் ரூ 75 லட்சம் செலவில் செயற்கை நீருற்று, கழிப்பிடம் ரூ 15 லட்சம் செலவிலும் அமைக்கப்பட உள்ளது.
குற்றாலத்தில் குறைகள் ஏதுமிருந்தால் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், கோட்டாட்சியர், தாசில்தார் உள்ளிட்டவர்களிடம் புகார் தெரிவிக்கலாம். அருவிக் கரையில் மருத்துவ வசதி தயார் நிலையில் உள்ளது. மேலும் மருத்துவ சிகிச்சையளிக்க தனிக்குழு ஓன்று அருவிக் கரையில் இருக்குமாறு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு நாளை முதல் படகு குழாமில் படகு போக்குவரத்து தொடங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்