சென்னை அரசு மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்- புரளி என தகவல்
சென்னை: சென்னை ராஜிவ்காந்தி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைகளுக்கு மர்மநபர்களால் தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நோயாளிகள், பார்வையாளர்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப் படுகின்றனர்.
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு இன்று அதிகாலை 2 மணியளவில் தொலைபேசி வாயிலாக மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். போனில் பேசிய நபர், ராஜிவ்காந்தி மருத்துவமனை மட்டுமின்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக இது குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் இரண்டு மருத்துவமனையிலும் சோதனை நடத்தினர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், ஒவ்வொரு பிளாக்கிலும் 5 மாடிகளுடன் மொத்தம் 3 பிளாக்குகள் உள்ளன. எனவே அதிகாலை 3 மணிக்கு இங்கு தொடங்கிய சோதனை காலை வரை நீடித்தது.
ஆனால், இரண்டு மருத்துவமனைகளிலும் சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் சோதனையில் கிடைக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது.
போனில் பேசிய நபர் குடிபோதையில் பேசியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். போன் நம்பர் மூலம் மிரட்டல் விடுத்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தபோதும், இரண்டு மருத்துவமனைகளிலும் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் பலத்த சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications