2 பள்ளிகளுக்கு போனில் வெடிகுண்டு மிரட்டல் - சென்னையில் பதற்றம்
சென்னை: சென்னைப் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப் பட்டுள்ளதாக இன்று காலை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்ம அழைப்பால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.
இன்று காலை சுமார் 9 மணி அளவில் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் ஒன்று வந்தது. அதில் பேசிய மர்ம ஆசாமி, வளசரவாக்கத்தில் உள்ள வெங்கடேஸ்வரா பள்ளி மற்றும் விருகம்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பள்ளி ஆகிய 2 பள்ளிகளிலும் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு போனை துண்டித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இத்தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக இது தொடர்பாக வளசரவாக்கம் மற்றும் விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளிகளூக்கு விரைந்த அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பள்ளிகளில் படித்து வரும் ஆயிரக் கணக்கான மாணவர்களை பத்திரமாக மைதானத்துக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர், பள்ளி முழுவதும் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்த தொலைபேசி எண்ணைக் கொண்டு அதில் பேசிய மர்மநபரைப் போலீசார் தேடி வருகின்றனர். பள்ளிகளில் வெடிகுண்டு இருப்பதாக பரவிய தகவலால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications