சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: வெளிநாட்டில் இருந்து வந்த மர்ம அழைப்பு
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து தீவிர சோதனை நடத்தப்பட்டது.
ஜாம்பஜாரை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரது செல்போனுக்கு புதன்கிழமை இரவு 11.50 மணிக்கு வெளிநாட்டில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர், "சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 4 மற்றும் 5 வது பிளாட்பாரங்களில் இன்னும் சிறிது நேரத்தில் வெடிகுண்டுகள் வெடிக்கும்" என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார்.
வெடிகுண்டு புரளி
இதனால் பதட்டம் அடைந்த ஸ்ரீதர், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இத்தகவலைத் தெரிவித்தார். உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
நள்ளிரவில் தொடங்கிய சோதனை காலை 5 மணி வரை நடைபெற்றது. ஆனால் இந்த சோதனையில் வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று உறுதி செய்யப்பட்டது.
போலீஸ் விசாரணை
வெளிநாட்டில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்தோனேசியாவுக்கு அருகில் உள்ள ஒரு தீவில் இருந்து மர்ம நபர் பேசியது தெரியவந்தது. அந்த நபருக்கு ஸ்ரீதரின் செல்போன் நம்பர் எப்படி கிடைத்தது? எதற்காக அவர் இப்படி செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பாலிடெக்னிக் கல்லூரிக்கு மிரட்டல்
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வியாழக்கிழமை காலையில் பேசிய நபர், "திருவொற்றியூர் - மணலி சாலையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் வெடிகுண்டு வைத்துள்ளனர்" என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதுவும் புரளி
உடனடியாக அந்த கல்லூரிக்குச் சென்ற வெடிகுண்டு நிபுணர்கள், வகுப்பறைகளில் இருந்த மாணவ-மாணவிகளை வெளியேற்றி கல்லூரி முழுவதும் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. மிரட்டல் விடுத்த நபரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.