சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2 பேர் வெடிகுண்டுகளுடன் சுற்றுவதாக வதந்தி!
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2 பேர் வெடிகுண்டுகளுடன் சுற்றுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் மோப்ப நாய்கள் சகிதம் உடனடியாக தேடுதல் நடவடிக்கையில் இறங்கினர்.
மே 1ம் தேதி பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்த குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வெடித்தது. இதில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. தற்போது ரயில் நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ரயில்வே நிலையத்தில் உள்ள உதவி மையத்துக்கு ஒரு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளுடன் மர்ம நபர்கள் 2 பேர் நடமாடுகிறார்கள். உஷாராக இருங்கள் என்று கூறி விட்டு போனை வைத்து விட்டான்.
இதையடுத்து ரயில்வே போலீசாரும், பாதுகாப்பு படையினரும் உஷார் ஆனார்கள். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தினார்கள்.
துணைக் கமிஷனர் செந்தில்குமார், உதவி கமிஷனர் அடைக்கலம், இன்ஸ்பெக்டர் சுந்தரம் தலைமையில் ஏராளமான போலீசாரும் சென்று சோதனையில் ஈடுபட்டனர். இதுவரை வெடிகுண்டுடன் யாரும் சிக்கவில்லை. எனவே இது வதந்தியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சென்ட்ரல் ரயில் நிலைய சம்பவத்திற்குப் பின்னர், இதேபோல சென்னையில், ஆவடி ரயில் நிலையம், எக்ஸ்பிரஸ் அவென்யூ, தியாகராயநகர் பள்ளி ஆகியவற்றுக்கு ஒரே நாளில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது மீண்டும் சென்ட்ரலுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்ட்ரலில் தெற்கு பகுதியில் ஒரு நுழைவு வாயிலும், மேற்கு பகுதியில் ஒரு நுழைவு வாயிலும் உள்ளது. இதில் தெற்கு பகுதியில் மட்டும் வெடிபொருளை கண்டுபிடிக்கும் ஸ்கேன் கருவியும் மெட்டல் டிடெக்டரும் வைக்கப்பட்டு சோதனை நடைபெறுகிறது. பயணிகளின் உடமைகளை ஸ்கேன் கருவியில் வைத்து சோதனை நடத்தப்படுகிறது.
ஆனால் மேற்குப் பகுதியில் மெட்டல் டிடெக்டர் கருவி பெயரளவுக்குத்தான் உள்ளது. அதில் சோதனை நடைபெறுவதில்லை. தற்போது அங்கும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு போலீசார் நின்று கொண்டு பயணிகள் அனைவரையும் மெட்டல் டிடெக்டர் வாசல் வழியாக சென்று வரும் வகையில் அனுப்பி வைக்கிறார்கள். ஆனாலும் ஒரு சிலர் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு சென்று வருகிறார்கள். இதுதான் ரிஸ்க்காக உள்ளது.












Click it and Unblock the Notifications