சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலகம், அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரக்கோணம் ரயில் நிலையம், துணை எஸ்.பி. அலுவலகம், எம்.எல்.ஏ. அலுவலகம் ஆகியவற்றுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை சேத்துப்பட்டு ஸ்பெக்ட்ரஸ் ரோட்டில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகே ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பத்திரிக்கை அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்திற்கு சனிக்கிழமை கடிதம் ஒன்று வந்தது.

அதில், இந்து துவேசத்தை நீங்கள் கடைபிடிக்கிறீர்கள். அதனால் உங்கள் அலுவலகத்தை குண்டு வைத்து தகர்ப்போம் என்று எழுதப்பட்டிருந்தது. கடிதம் ஐஎஸ்ஐஎஸ் பெயரில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரக்கோணம் ரயில் நிலைய மேலாளர் சிவசங்கரனுக்கு கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,
அரக்கோணத்தில் உள்ள ரயில் நிலையம், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், எம்.எல்.ஏ. அலுவலகம் மற்றும் எம்.எல்.ஏ.வின் வீடு, ஒருங்கிணைந்த நீதிமன்றம், டவுன் காவல் நிலையம் உள்பட முக்கிய இடங்கள் விரைவில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும்.
மாவோயிஸ்டு தீவிரவாதிகள், இந்த தாக்குதலை நடத்த சதித்திட்டம் தீட்டியுள்ளனர். பனப்பாக்கம், நெமிலி வழியாக அரக்கோணத்திற்குள் தீவிரவாதிகள் புகுவதை யாராலும் தடுக்க முடியாது. நெமிலி காவல் நிலையமும் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும். வெடிகுண்டு தாக்குதல் திட்டத்தை முடிந்தால் முறியடிக்கவும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு கடிதங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications