வெடிகுண்டு மிரட்டல்: தமிழக அமைச்சர்கள் 2 பேரின் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

நாமக்கல் மாவட்டம் காவெட்டிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை கடிதம் வந்தது.
அந்த கடித்ததில் கூறியிருந்ததாவது,
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாததால் தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் குண்டு வெடிக்கும். தொழில் துறை அமைச்சர் தங்கமணி, உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், முன்னாள் அமைச்சர் சம்பத் ஆகியோரது வீடுகளிலும் குண்டு வெடிக்கும். இது தமிழக அரசுக்கு எச்சரிக்கை என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கடித விவகாரம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே வெடிகுண்டு மிரட்டலால் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள கோவிந்தம்பாளையத்தில் இருக்கும் அமைச்சர் பி. தங்கமணியின் வீட்டில் நேற்று முதல் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக தனது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என்று அவர் கூறியிருந்ததால் இத்தனை நாட்களாக பாதுகாப்பு போடவில்லை. தற்போது வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் தலைமையில் 5 போலீசார் அவரது வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதே போன்று தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையனூரில் இருக்கும் அமைச்சர் பி.பழனியப்பனின் வீட்டிலும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இங்கு உதவி ஆய்வாளர் தலைமையில் 3 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டசபை கூட்டத் தொடர் நடந்து வருவதால் பழனியப்பன் தனது குடும்பத்துடன் சென்னையில் தங்கியுள்ளார். அதனால் மோளையனூரில் உள்ள வீட்டில் யாரும் இல்லை.
இந்நிலையில் கடிதம் போஸ்ட் செய்யப்பட்ட வள்ளிபுரம் போஸ்ட் ஆபீஸில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் எந்த தடயமும் கிடைக்கவில்லை. சந்தேகத்தின்பேரில் சிலரிடம் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications