24 மணிநேரத்தில் திருப்பூர் அம்மா உணவகத்தில் குண்டு வெடிக்கும்: தொலைபேசி அழைப்பால் பரபரப்பு
திருப்பூர்: திருப்பூரில் உள்ள அம்மா உணவகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை 10 மணிக்கு மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. எடுத்து பேசியபோது மறுமுனையில் பேசிய நபர் பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது அது 24 மணிநேரத்திற்குள் வெடித்துச் சிதறும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதையடுத்து அம்மா உணவகம் அருகே நின்று கொண்டிருந்த பேருந்துகள் அப்புறப்படுத்தப்பட்டு, கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போலீசார் பேருந்து நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் குண்டு எதுவும் வைக்கப்பட்டுள்ளதா என்று தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.