ஹலோ போலீஸ் கண்ட்ரோல் ரூமா? பாம் வச்சிருக்கேன்… மிரட்டல் விடுத்த மர்ம ஆசாமி
சென்னை: நடுரோட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது வெடிக்கப்போவதாகவும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம ஆசாமி பேசிய தொலைபேசியால், விடிய விடிய போலீசார் தூங்காமல் வெடிகுண்டை தேடியுள்ளனர்.
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இரவு 11.30 மணியளவில் ஒரு போன் வந்தது. அதில் பேசிய மர்ம ஆசாமி, நான் உளவுத்துறையில் இருந்து பேசுகிறேன். கதீட்ரல் சாலை, எல்டாம்ஸ் சாலை இடையே வெடிகுண்டு இருக்கிறது.

உடனடியாக போக்குவரத்தை நிறுத்தி பொதுமக்களை காப்பாற்றுங்கள் என கூறிவிட்டு போனை துண்டித்து விட்டான்.
இதையடுத்து சென்னை மாநகர போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இரவு 1 மணி வரை கதீட்ரல்- எல்டாம்ஸ் சாலை வரை தீவிர சோதனை நடத்தப்பட்டது. அந்த சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள், துப்பறியும் நாய் ஆகியவற்றுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
வெடிகுண்டு மிரட்டல் அழைப்பால் நள்ளிரவில் சென்னையில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு காணப்பட்டது. முழுமையான சோதனைக்கு பிறகு வெடி குண்டு மிரட்டல் விடுத்தது வெறும் புரளி என உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் மிரட்டல் விடுத்தது யார் எங்கிருந்து அந்த அழைப்பு வந்தது, நள்ளிரவில் போலீசின் தூக்கத்தை கெடுத்த மர்மநபர் யார் என்று சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications