குளிர்பானம் என நினைத்து ஆசிட் குடித்த 7 வயது சிறுவன் பலி
புதுவை: புதுவையில் தவறுதலாக குளிர்பானம் எனக் கருதி ஆசிட்டைக் குடித்த 7 வயது சிறுவன் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
புதுவை கதிர்காமம் காமராஜர் தெருவை சேர்ந்த நாகராஜ் என்பவரது ஏழு வயது மகன் தருண்ராஜ். இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
நாகராஜ் வீட்டில் தங்கி தனியார் பள்ளி ஒன்றில் வேதியியல் ஆசிரியராக பணி புரிந்து வரும் அவரது மைத்துனர் பிரகாஷ், பள்ளி புராஜக்ட் ஒர்க்கிற்காக குளிர்பான பாட்டிலில் ஆசிட் வாங்கி வந்து வீட்டில் வைத்திருந்திருக்கிறார்.
இதையறியாத சிறுவன் தருண்ராஜ், நேற்று காலை குளிர்பான பாட்டிலில் இருந்த ஆசிட்டை தவறுதலாக குடித்து விட்டதாகத் தெரிகிறது. இதில் குடல் முழுவதும் வெந்த நிலையில் அலறி துடித்த சிறுவனை அவனது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு சிறுவன் தருண்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications