சென்னையில் நடந்த இலங்கை புறக்கணிப்பு போராட்டம்: இலங்கை பொருட்களை புறக்கணிக்க மாணவர்கள் சூளுரை
சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு மாணவர் பேரவை ஒருங்கிணைப்பு ஏற்பாடு செய்திருந்த இலங்கை புறக்கணிப்பு போராட்டத்தில் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டு இலங்கைப் பொருட்கள் மற்றும் சேவைகளை புறக்கணிக்க வேண்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழர்களை கொடூரமான முறையில் இனப்படுகொலை செய்த இலங்கையில் தயாரிக்கப்படும் பொருட்கள், தின்பண்டங்கள், சேவைகள் என அனைத்தையும் தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட தியாகு அவர்கள் இலங்கையை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்று விரிவாக பேசினார். உலக நாடுகள் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக, இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக நடத்திய புறக்கணிப்பு போராட்டத்தை பற்றியும், காந்தியடிகள் பிரித்தானியா பொருட்களுக்கு எதிராக நடத்திய புறக்கணிப்பு போராட்டங்கள் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.
இலங்கைப் பொருட்களை புறக்கணிப்பதன் மூலம் அந்நாட்டு அரசுக்கு மக்கள் அழுத்தம் கொடுக்க முடியும் என்றும் தமிழீழ மக்களுக்கு இதன் மூலம் நல்லதொரு தீர்வை ஏற்படுத்த இலங்கைக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்று கூறினார். இது போன்ற போராட்டங்கள் மேலும் விரிவடைய வேண்டும் என்றும், இனப்படுகொலை செய்த இலங்கை அரசை உலக நாடுகள் தனிமைப்படுத்த இப்படியான போராட்டங்கள் அனைத்து நாடுகளிலும் தமிழர்களால் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார் தியாகு.
அதன் பிறகு பேசிய ராஜ்குமார் பழனிசாமி, இலங்கை புறக்கணிப்பு எந்த அளவிற்கு தமிழகத்தில் விரிவடைந்து உள்ளது என்றும், இலங்கை கிரிக்கெட், இலங்கை சேவைகள் எந்த அளவிற்கு தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்பது பற்றியும் கூறினார். மேலும் மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்தவரை தமிழகத்தில் விற்பனையாகி வரும் இலங்கை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் இலங்கை பொருட்களை வாங்காமல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
முடிவில் மாணவர்கள் இலங்கை பொருட்கள், சேவைகள், விளையாட்டு ஆகிய அனைத்தையும் தமிழக மக்கள் புறக்கணிக்க பரப்புரை மேற்கொள்ளவதாக உறுதி ஏற்றனர். வரக்கூடிய நாட்களில் இன்னும் வீரியமாக இலங்கைப் புறக்கணிப்பு போராட்டத்தை நடத்துவோம் என்று சூளுரைத்தனர்.